

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள புகழ்பெற்ற அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயிலின் வைகாசி விசாக தேர்த்திருவிழா கடந்த 1-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நான்காம் நாள் திருவிழாவின்போது, அர்த்தநாரீஸ்வரர், செங்கோட்டு வேலவர், ஆதிகேசவ பெருமாள் ஆகியோர் பரிவார தெய்வங்களுடன் திருமலையில் இருந்து நகருக்கு எழுந்தருளினர். மலையில் உள்ள மண்டபங்களில் வெவ்வேறு சமூகத்தவர்களின் மண்டபக் கட்டளைகள் நடந்து மலை அடிவாரத்தில் உள்ள ஆறுமுகசாமி திருக்கோயிலை வந்தடைந்தனர்.
அங்கிருந்து மின்விளக்குகளாலும் பூக்களாலும் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் நான்கு ரத வீதிகள் வழியாக திரு வீதி உலா வந்த அர்த்தநாரீஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சப்பரத்தின் முன் ஏராளமான பெண்கள் சிவ வாத்தியங்கள் முழங்க நடனமாடி வந்தனர். இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.