திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோவிலில் தேரோட்டம்

தேரோட்டத்தை தொடர்ந்து உற்சவர்களான ஸ்ரீதேவி பூதேவி, ஸ்ரீ கோவிந்தராஜ சுவாமி, நம்மாழ்வார் உள்ளிட்டோருக்கு திருமஞ்சன நிகழ்ச்சி நடந்தது.
Published on

திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோவிலில் பிரம்மோற்சவ விழா நடைபெற்று வருகிறது. விழாவின் 8-ம் நாளான இன்று தேரோட்டம் (ரத உற்சவம்) விமரிசையாக நடைபெற்றது. ஸ்ரீதேவி பூதேவி சமேத கோவிந்தராஜ சுவாமி சர்வ அலங்காரத்துடன் தேரில் எழுந்தருளி ஊர்வலமாகச் சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

காலை 6.15 மணிக்கு தொடங்கிய தேரோட்டம் கர்னாலா வீதி, பேரி வீதி, காந்தி வீதி வழியாகச் சென்று மீண்டும் கோவில் ரதமண்டபத்தில் நிறைவடைந்தது. திரளான பக்தர்கள் கோவிந்த நாமம் முழங்கி தேர் இழுத்தனர். பக்தர்கள் தேங்காய் அடித்து, கற்பூர ஆரத்தி எடுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.

பின்னர், காலை 10.00 மணி முதல் மதியம் 12 மணி வரை உற்சவர்களான ஸ்ரீதேவி பூதேவி, ஸ்ரீ கோவிந்தராஜ சுவாமி, நம்மாழ்வார் உள்ளிட்டோருக்கு திருமஞ்சன நிகழ்ச்சி நடந்தது. இதில், பால், தயிர், தேன், சந்தனம், பல்வேறு பழச்சாறுகளால் அபிஷேகம் செய்யப்பட்டது.

மாலை 5.30 மணி முதல் 6 மணி வரை ஊஞ்சல் சேவை நடைபெறும். இரவு 7 மணி முதல் 9 மணி வரை அஸ்வ வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.

நாளை செவ்வாய்க்கிழமை காலை 8 மணி முதல் 9.30 மணி வரை (ஆழ்வார் தீர்த்தத்தில்) திருமஞ்சனம் மற்றும் சக்கரஸ்நானம் நடைபெறுகிறது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com