திருப்பதி சொர்க்க வாசல் தரிசனம்: 91 கவுண்டர்களில் பக்தர்கள் டோக்கன் பெற ஏற்பாடு

ஜனவரி 10, 11 மற்றும் 12 ஆகிய 3 நாட்களுக்கான 1.20 லட்சம் இலவச சர்வதரிசன டோக்கன்கள் ஜனவரி 9-ந்தேதி காலை 5 மணிமுதல் வழங்கப்படும்.
திருப்பதி சொர்க்க வாசல் தரிசனம்: 91 கவுண்டர்களில் பக்தர்கள் டோக்கன் பெற ஏற்பாடு
Published on

திருமலை:

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி ஜனவரி 10-ந் தேதி சொர்க்கவாசல் திறக்கப்பட்டு 19-ந் தேதி வரை 10 நாட்களுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். இந்த 10 நாட்களுக்கு உண்டான ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் ஆன்லைனில் நேற்று வெளியிடப்பட்டது. இந்த டிக்கெட்டுகள் வெளியிடப்பட்ட 25 நிமிடத்தில் 1.40 லட்சம் டிக்கெட்டுகளையும் பக்தர்கள் முன்பதிவு செய்தனர். இந்த டிக்கெட்டுகளை பெறுவதற்காக 14 லட்சம் பேர் தேவஸ்தான இணையதளத்தில் முயற்சி மேற்கொண்டு கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்தனர்.

சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் தீர்ந்த நிலையில், இனி இலவச தரிசன டோக்கன்களை பெற்று சொர்க்கவாசல் தரிசனம் செய்யலாம். சொர்க்கவாசல் திறக்கப்படும் 10 நாட்களுக்கான இலவச தரிசன டோக்கன்கள் திருப்பதியில் 9 இடங்களில் வழங்கப்பட உள்ளன. இதற்கான கவுண்டர்கள் ஏற்பாடு செய்வதை தேவஸ்தான செயல் அதிகாரி ஷியாமளா ராவ், கூடுதல் செயல் அதிகாரி வெங்கையா சவுத்திரியுடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செயல் அதிகாரி ஷியாமளா ராவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

சொர்க்கவாசல் தரிசனத்திற்கு ஜனவரி 10, 11 மற்றும் 12 ஆகிய 3 நாட்களுக்கு உண்டான 1.20 லட்சம் இலவச சர்வதரிசன டோக்கன்கள் ஜனவரி 9-ந்தேதி காலை 5 மணிமுதல் தொடர்ந்து வழங்கப்படும். 3 நாட்களுக்கான டோக்கன்கள் முடிந்த பின்னர், அந்தந்த நாட்களுக்கு டோக்கன்கள் முந்தைய நாள் வழங்கப்படும்.

இதற்காக திருப்பதியில் 8 மையங்களில் 87 கவுண்டர்கள், திருமலையில் 4 கவுண்டர்கள் என மொத்தம் 91 கவுண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. பக்தர்கள் தங்களின் ஆதார் அட்டையை காண்பித்து டோக்கன் பெற வேண்டும். இந்தமுறை முறைகேடுகள் நடக்காமல் இருக்க டோக்கன் பெற்ற பக்தர்களுக்கு அவர்களின் புகைப்பட அடையாளத்துடன் கூடிய டோக்கன் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com