வசந்தோற்சவம்: தங்க குதிரை வாகனத்தில் வீதி உலா வந்த காஞ்சி வரதராஜ பெருமாள்

விழாவின் ஏழாம் நாளான இன்று குதிரை வாகன வீதி உலாவும், அனந்த சரஸ் திருக்குளத்தில் தீர்த்தவாரி உற்சவமும் நடைபெற்றது.
வசந்தோற்சவம்: தங்க குதிரை வாகனத்தில் வீதி உலா வந்த காஞ்சி வரதராஜ பெருமாள்
Published on

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் கோடை உற்சவத்தை குறிக்கும் வகையில் வசந்த உற்சவ விழா நடைபெற்று வருகிறது. விழாவின் ஏழாம் நாளான இன்று வசந்த மண்டபத்தில் ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் எழுந்தருளிய வரதராஜ பெருமாளுக்கு மஞ்சள், சந்தனம், துளசி, உள்ளிட்டவைகள் வைத்து வேதப்பாராயண கோஷ்டியினர் வேத மந்திரங்களை ஒலிக்க சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டது. பின்னர் சுவாமிக்கு வெண்பட்டு உடுத்தி, கோடாலி சவுரி கொண்டை, மல்லிகை பூ, செண்பகப்பூ, மனோரஞ்சித பூ, பஞ்சவர்ண மலர் மாலைகள் அணிவித்து சிறப்பு தூப, தீப ஆராதனை செய்யப்பட்டது.

வசந்த மண்டபத்தில் இருந்து ஊர்வலமாக அழைத்து வரப்பட்ட வரதராஜப் பெருமாளை தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருள செய்து, பின்னர் மேளதாள வாத்தியங்கள் முழங்க, வேதபாராயண கோஷ்டியினர் பாடிவர, சன்னதி வீதி நான்கு மாடவீதியில் வீதி உலா வர செய்தனர். அப்போது வீதியில் திரண்டிருந்த பக்தர்கள் கற்பூர ஆரத்தி எடுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து கோவிலுக்கு திரும்பிய வரதராஜ பெருமாள் அனந்தசரஸ் திருக்குளம் அருகே எழுந்தருளியதை தொடர்ந்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. அதன்பின்னர் திருக்குளத்தில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com