

சென்னை,
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதன் முதலாவது டெஸ்ட் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது.
பின்னர் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில 89.3 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 263 ரன்கள் சேர்த்தது. கேப்டன் ஜோ ரூட் 128 ரன்களுடன் (197 பந்து, 14 பவுண்டரி, ஒரு சிக்சர்) களத்தில் இருந்தார். நேற்றைய ஆட்டத்தில் இந்திய வீரர்களின் பந்துவீச்சு மட்டுமின்றி பீல்டிங்கும் ஏமாற்றம் அளித்தது.
இந்நிலையில் இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தில் ஜோ ரூட்டுடன், பென் ஸ்டோக்ஸ் ஜோடி சேர்ந்தார். இந்த இருவரின் கூட்டணி அதிரடியாக விளையாடியது. இதில் ஸ்டோக்ஸ் 74 பந்துகளில் 50 ரன்கள் அடித்தார். கேப்டன் ஜோ ரூட்டும் தன் பங்குக்கு 150 ரன்களை கடந்தார். இதனையடுத்து இரண்டாம் நாள் உணவு இடைவேளையில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்புக்கு 355 ரன்கள் எடுத்துள்ளது. ஜோ ரூட் 156 ரன்களும், பென் ஸ்டோக்ஸ் 63 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
இந்திய அணியின் சார்பில் அதிகபட்சமாக பும்ரா 2 விக்கெட்டுகளும், அஸ்வின் ஒரு விக்கெட்டும் வீழ்த்தி உள்ளனர்.