போலி மதிப்பெண் சான்றிதல் கொடுத்து கல்லூரியில் சேர்ந்த வழக்கில் 5 ஆண்டு சிறை: பாஜக எம்.எல்.ஏ. தகுதி நீக்கம்


போலி மதிப்பெண் சான்றிதல் கொடுத்து கல்லூரியில் சேர்ந்த வழக்கில் 5 ஆண்டு சிறை: பாஜக எம்.எல்.ஏ. தகுதி நீக்கம்
x
தினத்தந்தி 10 Dec 2021 9:12 AM GMT (Updated: 10 Dec 2021 9:12 AM GMT)

போலி மதிப்பெண் சான்றிதல் கொடுத்து கல்லூரியில் சேர்ந்த வழக்கில் 5 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுள்ள பாஜக எம்.எல்.ஏ. சட்டசபையில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியாவில் உள்ள கோசைகஞ்ச் தொகுதி பாஜக எம்.எல்.ஏ.வாக செயல்பட்டு வருபவர் இந்திரபிரதாப் திவாரி. இவர் 1990 ஆம் ஆண்டு அயோத்தியில் உள்ள சகெட் டிகிரி கல்லூரியில் 2-ம் ஆண்டு பட்டப்படிப்பு படித்துள்ளார். அவர் 2-ம் ஆண்டு பட்டப்படிப்பில் தோல்வியடைந்துள்ளார். 

ஆனால், இந்திரபிரதாப் போலியான மதிப்பெண் சான்றிதல்களை கொண்டு பட்டப்படிப்பில் 3-ம் ஆண்டு சேர்ந்துள்ளார். போலியான மதிப்பெண் சான்றிதல் அளித்து கல்லூரி வகுப்பில் சேர்ந்ததாக இந்திரபிரதாப் மீது சகெட் டிகிரி கல்லூரி தலைமை ஆசிரியர் வழக்குத்தொடர்ந்தார். இந்த வழக்கு 28 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.

இதற்கிடையில், இந்த வழக்கில் 28 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த அக்டோபர் 10-ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், போலி மதிப்பெண் சான்றிதழ்களை வழக்கி எம்.எல்.ஏ. இந்திரபிரதாப் கல்லூரி வகுப்பில் சேர்ந்தது உறுதியானது. 

இதனை தொடர்ந்து எம்.எல்.ஏ. இந்திரபிரதாப் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு அவருக்கு 8 ஆயிரம் ரூபாய் அபராதமும், 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து கோர்ட்டு அதிரடி தீர்ப்பு வழங்கியது.      

இந்நிலையில், போலி மதிப்பெண் சான்றிதழ் வழக்கில் சிறையில் உள்ள எம்.எல்.ஏ. இந்திரபிரதாப் உத்தரபிரதேச சட்டசபையில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்திரபிரதாப்பை சட்டசபை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். 

இந்திரபிரதாப் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து உத்தரபிரதேசத்தில் 8 தொகுதிகள் காலியாக உள்ளன. அம்மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story