பாகிஸ்தானில் நிலவும் அரசியல் குழப்பம்; இம்ரான் கான் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்!


பாகிஸ்தானில் நிலவும் அரசியல் குழப்பம்; இம்ரான் கான் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்!
x
தினத்தந்தி 20 March 2022 9:24 AM GMT (Updated: 20 March 2022 9:24 AM GMT)

போராட்டக்காரர்கள் மாளிகையின் உள்ளே புகுந்து தேசிய சட்டமன்ற உறுப்பினர்களை தாக்க தொடங்கினர்.

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை முன்னிட்டு அரசியல் குழப்பம் நிலவி வருகிறது. 24 தேசிய சட்டமன்ற உறுப்பினர்கள் ஆளும்கட்சிக்கு எதிராக வாக்களிக்க உள்ளனர். அவர்கள் அனைவரும் இஸ்லாமாபாத்தில்  இருக்கும் சிந்து மாளிகையில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று, அவர்களுக்கு எதிராக ஆளும்கட்சி தொண்டர்கள் சிந்து மாளிகையின் வெளியே ஆர்ப்பாட்டம் நடத்தினர். திடீரென ஆர்ப்பாட்டம் வன்முறையாக மாறியது. போராட்டக்காரர்கள் மாளிகையின் உள்ளே புகுந்து தேசிய சட்டமன்ற உறுப்பினர்களை தாக்க தொடங்கினர்.  இது பெரும் வன்முறையாக மாறியது.

இந்த வன்முறையை கண்டித்து, இஸ்லாமாபாத்தில் உள்ள சிந்து மாளிகையைத் தாக்கிய இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பி.டி.ஐ) கட்சிக்கு எதிராக பாகிஸ்தான் மக்கள் கட்சி (பிபிபி) நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தியது.

சிந்து மாளிகையில் கடுமையான வன்முறை மற்றும் உயிரிழப்புகளை ஏற்படுத்துவதற்காக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலை இஸ்லாமாபாத் போலீசார் கண்டுகொள்ளாமல் அமைதி காத்தனர். ஆனால் 
சிந்து மாகாண போலீசார் உரிய நடவடிக்கை எடுத்தனர் என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

சிந்து மாகாண தகவல் மற்றும் தொழிலாளர் மந்திரி சயீத் கானி கூறுகையில், “தற்போதைய மத்திய அமைச்சர்கள் வெளிப்படையாக மிரட்டல்களை விடுத்து நாட்டில் வன்முறையை ஏற்படுத்த சதித்திட்டங்களை தீட்டி வருகின்றனர். ஆளும்கட்சியின் ஆட்சிக்காலம் முடிவுபெறப்போகும் நிலைமையை முன்கூட்டியே உணர்ந்து கொண்டு அவர்கள் இதுபோன்ற தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளனர்.

பாகிஸ்தான் மக்கள் கட்சியை பயமுறுத்துவதற்காக நடத்தப்பட்ட கோழைத்தனமான செயல் இது. இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டவர்களை இஸ்லாமாபாத் காவல்நிலையத்துக்கு சென்று இம்ரான் கானின் நெருங்கிய பிரமுகர் விடுதலை செய்து வெளியே அழைத்து சென்றுள்ளார்.

வன்முறை சம்பவத்திற்குப் பிறகு பதிவு செய்யப்படும் எப்ஐஆரில், இம்ரான் கான் மற்றும் உள்துறை மந்திரியின் பெயர்கள் சேர்க்கப்பட வேண்டும்” என்றார்.

Next Story