பஸ்-டிப்பர் லாரி நேருக்குநேர் மோதல்: 19 பயணிகள் படுகாயம்

சின்னமனூர் அருகே பஸ்சும், டிப்பர் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 19 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.
பஸ்-டிப்பர் லாரி நேருக்குநேர் மோதல்: 19 பயணிகள் படுகாயம்
Published on

சின்னமனூர்,

தேனியில் இருந்து கம்பம் நோக்கி ஒரு தனியார் பஸ் சென்றுகொண்டிருந்தது. வழியில் சின்னமனூர் அருகே உள்ள வேம்படிகளம் என்ற இடத்தில் வரும்போது முன்னால் சென்ற வாகனத்தை அதிவேகமாக முந்த முயன்றது.

அப்போது, எதிரே கொல்லத்தில் இருந்து தேனிக்கு கிரானைட் கற்களை ஏற்றி வந்துகொண்டிருந்த டிப்பர் லாரியின் மீது பஸ் நேருக்கு நேர் மோதியது.

இதில் பஸ்சில் வந்த உத்தமபாளையம் அருகே உள்ள ராயப்பன்பட்டியை சேர்ந்த அமுதா (வயது48), தெய்வ கனி (40), வனிதா (35), கூடலூரை சேர்ந்த காயத்ரிதேவி(40), கம்பத்தை சேர்ந்த சுரேஷ் (34), உத்தமபாளையம் அருகே உள்ள பரமசிவன்பட்டியை சேர்ந்த 4-ம் வகுப்பு மாணவன் சந்தோஷ் (9), வத்தலகுண்டு அருகே உள்ள விராலிபட்டியை சேர்ந்த லட்சுமி (53) உள்பட 19 பயணிகள் படுகாயமடைந்தனர். இதையடுத்து அவர்கள் அனைவரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் சின்னமனூர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதில் விராலிபட்டி லட்சுமி மேல் சிகிச்சைக்காக தேனி மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

விபத்து குறித்து சின்ன மனூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com