ஈரோட்டில் பரபரப்பு மேம்பாலத்தில் அரசு பஸ் மோதியது கண்டக்டர் உள்பட 2 பேர் படுகாயம்

ஈரோட்டில் மேம்பாலத்தில் அரசு பஸ் மோதிய விபத்தில் கண்டக்டர் உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஈரோட்டில் பரபரப்பு மேம்பாலத்தில் அரசு பஸ் மோதியது கண்டக்டர் உள்பட 2 பேர் படுகாயம்
Published on

ஈரோடு,

நாமக்கல் குமாரபாளையத்தில் இருந்து சூரம்பட்டிவலசுக்கு நேற்று மாலை அரசு டவுன் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பஸ் சவிதா சிக்னல் பகுதியில் திரும்பியது. அப்போது இடது புறமாக மற்றொரு பஸ் நின்று கொண்டிருந்தது. இதனால் டிரைவர் செல்வன் அரசு பஸ்சை வலது புறமாக ஓட்டிச்சென்றார்.

அப்போது எதிர்பாராதவிதமாக மேம்பாலத்தின் தூணின் மீது பஸ் பயங்கரமாக மோதியது. இதில் பஸ்சின் மேற்கூரை முழுவதும் சேதமடைந்தது. மேலும், பஸ்சின் முன்பக்க கண்ணாடியும், ஜன்னல் கண்ணாடிகளும் நொறுங்கியது.

படுகாயம்

இந்த விபத்தில் பஸ்சில் இருந்த கண்டக்டர் ரஞ்சித்குமார், பயணி அன்பரசு (18) ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். மேலும் சில பயணிகள் லேசான காயத்துடன் தப்பினார்கள். விபத்து ஏற்பட்டதும், அக்கம் பக்கத்தனர் அங்கு விரைந்து சென்று விபத்தில் படுகாயம் அடைந்த ரஞ்சித்குமார், அன்பரசு ஆகியோரை மீட்டு அருகில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

வாகனங்கள் அதிக அளவில் சென்று வரும் மாலை நேரத்தில் விபத்து ஏற்பட்டதால், அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. ஈரோடு டவுன் போலீசார் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com