

மும்பை,
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் போன்ற நாடுகளில் இருந்து 2014-ம் ஆண்டுகளுக்கு முன் இந்தியாவுக்கு வந்து குடியேறிய முஸ்லிம் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்க மத்திய அரசு சட்டம் இயற்றி உள்ளது. இந்த சட்டத்துக்கு எதிராக பல்வேறு அரசியல் கட்சியினரும், மாணவர்களும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் குடியுரிமை சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை எதிர்த்து போராடுவதற்காக மராட்டியத்தில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாடி, இந்திய கம்யூனிஸ்டு, ஜனதா தளம் (எஸ்), விவசாயிகள் மற்றும் தொழிலாளர் கட்சி, முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் இணைந்து ஹம் பாரத் கி லோக்' (நாம் இந்தியாவின் குடிமக்கள்) என்ற புதிய இயக்கத்தை நேற்று தொடங்கின.
ஆனால் காங்கிரஸ், தேசியவாத காங்கிரசின் கூட்டணி கட்சியான சிவசேனா இந்த புதிய அமைப்பில் இடம் பெறவில்லை.
இந்த நிலையில், மாலையில் ஹம் பாரத் கி லோக் ' இயக்கம் சார்பில் மும்பை ஆகஸ்டு கிராந்தி மைதானத்தில் குடியுரிமை சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை கண்டித்து போராட்டம் நடந்தது.
இதில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட அந்த இயக்கத்தில் உள்ள அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
இதுதவிர இந்தி நடிகர்கள் பர்ஹான் அக்தர், சுசாந்த் சிங், ஸ்வரா பாஸ்கர், பட தயாரிப்பாளர்கள் ராகேஷ் ஓம்பிரகாஷ் மேரா, சயித் மிஸ்ரா, ஆனந்த் பட்வர்தன், பாரதீய ஜனதா மூத்த தலைவர் எல்.கே.அத்வானியின் முன்னாள் உதவியாளர் சுதீந்திர குல்கர்ணி மற்றும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் திரண்டு வந்து கலந்து கொண்டனர்.
அவர்கள் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா மற்றும் மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.நாக்பூரிலும் அந்த அமைப்பு சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.