அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகளை தின்று இளம்பெண் தற்கொலை கணவர் கைது

வரதட்சணை கொடுமையால், அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகளை தின்று இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக கணவர் கைது செய்யப்பட்டார்.
அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகளை தின்று இளம்பெண் தற்கொலை கணவர் கைது
Published on

ஹாசன்,

ஹாசன் டவுன் ஜெயநகர் பகுதியை சேர்ந்தவர் நாகேஷ். இவரது மகன் ஆதித்யா. இவர் குளிர்சாதன பெட்டி பழுது பார்க்கும் வேலை செய்து வருகிறார்.

இந்த நிலையில் ஆதித்யாவுக்கும், சங்கரிபுரம் பகுதியை சேர்ந்த அஸ்வினி(வயது 26) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் தீவிரமாக காதலித்து வந்தனர். இவர்களின் காதல் விவகாரம் அஸ்வினியின் பெற்றோருக்கு தெரியவந்தது. அவர்கள் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அஸ்வினி வீட்டைவிட்டு வெளியேறி ஆதித்யாவை திருமணம் செய்து கொண்டார்.

திருமணமான புதிதில் சந்தோஷமாக சென்று கொண்டு இருந்த ஆதித்யா, அஸ்வினியின் வாழ்க்கையில் வரதட்சணை என்ற அரக்கனால் புயல்வீச தொடங்கியது. அதாவது கடந்த ஒரு ஆண்டாக ஆதித்யா, அஸ்வினியிடம் வரதட்சணை வாங்கி வரும்படி கேட்டு கொடுமைப்படுத்தி வந்து உள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவும் வரதட்சணை கேட்டு ஆதித்யா, அஸ்வினியிடம் தகராறு செய்ததாக தெரிகிறது. இதனால் மனம் உடைந்த அஸ்வினி தனது அறைக்கு சென்று அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகளை தின்று தற்கொலைக்கு முயன்று உள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆதித்யா, அஸ்வினியை மீட்டு சிகிச்சைக்காக ஹாசனில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனாலும் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று காலை அஸ்வினி இறந்து விட்டார்.

இதுபற்றி அறிந்த ஹாசன் டவுன் போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று அஸ்வினியின் உடலை பார்வையிட்டு விசாரித்தனர். அப்போது ஆதித்யா வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதால் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகளை தின்று அஸ்வினி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதன்பின்னர் அஸ்வினியின் உடலை பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதால் தான் அஸ்வினி தற்கொலை செய்து கொண்டதாக ஆதித்யா மீது அஸ்வினியின் தந்தை போலீசார் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆதித்யாவை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

வரதட்சணை கொடுமையால் காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஹாசனில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com