

கன்னியாகுமரி,
குஜராத் மாநிலத்தில் உள்ள மகளிருக்கான ஒரு அமைப்பானது பிரதமரின் தூய்மை இந்தியா திட்டம், பெண் குழந்தைகள் கல்வியின் அவசியம் ஆகியவை பற்றி விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டு வருகிறது.
அந்த அமைப்பு சார்பில் வடமாநில கல்லூரி மாணவிகள் இணைந்து மோட்டார் சைக்கிள்களில் வழிப்புணர்வு பேரணியாக குஜராத் மாநிலம் சூரத் நகரில் இருந்து புறப்பட்டனர். பல்வேறு மாநிலங்களை கடந்து நேற்று முன்தினம் கன்னியாகுமரியை வந்தடைந்தனர். இந்த பிரசாரத்தில் 45 மாணவிகள் பங்கேற்றுள்ளனர். ஆளுக்கொரு மோட்டார் சைக்கிள்களில் அவர்கள் விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டு உள்ளனர்.
செல்லும் இடங்களில் எல்லாம் பொதுமக்களை சந்தித்து பெண்கல்வியின் அவசியம் குறித்து விளக்கி கூறுகிறார்கள். தொடர்ந்து நேற்று காலையில் குமரி விவேகானந்த கேந்திராவில் இருந்து மீண்டும் பயணத்தை தொடங்கினார்கள். அதனை குமரி மாவட்ட பா.ஜனதா மகளிர் அணி துணைத்தலைவி பார்வதி விஜயகுமார் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், நாகர்கோவில் நகரசபை முன்னாள் தலைவி மீனாதேவ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விழிப்புணர்வு பிரசார பயணம் மேற்கொண்டுள்ள மாணவிகள் கூறும் போது, நாங்கள் 15 மாநிலங்கள் வழியாக செல்ல முடிவு செய்துள்ளோம். எங்கள் பயண திட்டத்தின்படி சுமார் 10 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தை கடந்து, சுதந்திர தினத்தன்று காஷ்மீர் மாநிலத்தில் எங்கள் பயணத்தை நிறைவு செய்ய இருக்கிறோம் என்று கூறினார்கள்.