

தார் சாலை
அந்தியூர் அருகே கரட்டுப்பாளையம் அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து அண்ணாமார்பாளையம் பகுதி வரை ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு ரோடு மிகவும் மோசமாக உள்ளது.
இதனால் இங்கு தார் சாலை அமைத்து தரவேண்டும் என்று கடந்த 11 ஆண்டுகளாக அப்பகுதி கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் கரட்டுப்பாளையம், அண்ணமார்பாளையம், ஈச பாறை, பெருமாள் கோவில் புதூர், முனியப்பன் கோவில் பகுதி என 50-க்கும் மேற்பட்ட கிராமமக்கள் நேற்று அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு ஒன்று திரண்டார்கள்.
ஆர்ப்பாட்டம்
இதைத்தொடர்ந்து கிராமமக்கள் அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து அண்ணாமார்பாளையம் பகுதி வரை தார்சாலை அமைத்து தரவேண்டும். இல்லை என்றால் தேர்தலை புறக்கணிப்போம் என்று அறிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் அந்தியூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். மேலும் அரசு அதிகாரிகளிடம் பேசி தார்சாலை அமைக்க நடவடிக்கை எடுப்பதாக கூறினார்கள். அதை ஏற்றுக்கொண்ட கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றார்கள்.