ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் 9 கருட சேவை

9 பெருமாள் உற்சவர்கள் கருட வாகனங்களிலும், சுவாமி நம்மாழ்வார் அன்ன வாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர்.
ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் 9 கருட சேவை
Published on

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி ஆதிநாதா ஆழ்வார் கோவில், நம்மாழ்வாரின் அவதார தலமாகும். இக்கோவிலில் நம்மாழ்வாரின் அவதார தினமான வைகாசி விசாக நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் திருவிழா நடைபெறும். அவ்வகையில் இந்த ஆண்டு திருவிழா கடந்த மாதம் 31-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவின் ஐந்தாம் நாளில் சுவாமி நம்மாழ்வார், நவ திருப்பதி பெருமாள்களுக்கு ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவில் முன்பு மங்களாசாசனம் செய்யும் நிகழ்வு நடைபெற்றது. பின்னர் இரவு 11 மணியளவில் 9 பெருமாள்களும் கருட வாகனத்தில் எழுந்தருளும் கருட சேவை நடந்தது.

ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான், நத்தம் எம்இடர்கடிவான், திருப்புளியங்குடி காய்சினிவேந்தன், தொலைவில்லிமங்கலம் செந்தாமரைக்கண்ணன், இரட்டை திருப்பதி தேவபிரான், பெருங்குளம் மாயக்கூத்தன், தென்திருப்பேரை நிகரில் முகில்வண்ணன், திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள், ஆழ்வார்திருநகரி பொலிந்து நின்ற பிரான் ஆகியோர் கருட வாகனங்களிலும், சுவாமி நம்மாழ்வார் அன்ன வாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர். அதன் பின்னர் வீதிஉலா வந்தனர்.

இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 8-ம் தேதி விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெறுகிறது. 9 -ம் தேதி தீர்த்தவாரியுடன் விழா நிறைவடைகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com