ஆனி திருமஞ்சன விழா.. ஆனந்த நடனமாடி பக்தர்களுக்கு தரிசனம் தந்த நடராஜர்

நடராஜரின் ஆனந்த நடனத்தை தரிசிப்பதற்காக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்.
ஆனி திருமஞ்சன விழா.. ஆனந்த நடனமாடி பக்தர்களுக்கு தரிசனம் தந்த நடராஜர்
Published on

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா கடந்த 23-ந் தேதி முதல் விமரிசையாக நடைபெற்று வருகிறது. தினமும் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள், பஞ்சமூர்த்திகள் வீதிஉலா நடந்தது. நேற்று தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. பின்னர் இரவு 9 மணிக்கு சிவகாம சுந்தரி சமேத நடராஜருக்கு ஆயிரங்கால் மண்டபத்திற்கு கொண்டு செல்லப்பட்டு முன் முகப்பு மண்டபத்தில் ஏககால லட்சார்ச்சனை நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆனி திருமஞ்சனம் இன்று (புதன்கிழமை) நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரை ஆயிரங்கால் மண்டபத்தில் சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு மகாபிஷேகம், சொர்ணாபிஷேகம், புஷ்பாஞ்சலி நடைபெற்றது. காலை 10 மணியளவில் சித்சபையில் ரகசிய பூஜையும், திரு ஆபரண அலங்கார காட்சியும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து மதியம் 1.30 மணிக்கு பஞ்சமூர்த்தி விநாயகர், சுப்பிரமணியர், நடராஜர், சிவகாமசுந்தரி, சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகள் வீதி உலா வந்து 2.15 மணிக்கு ஆயிரங்கால் மண்டபம் வந்தடைந்தனர். பின்னர் பிற்பகல் 2.45 மணிக்கு மேல் ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து புறப்பட்ட நடராஜர், முன் முகப்பு மண்டபத்தில் உள்ள நடன பந்தலில் முன்னும் பின்னுமாக 3 முறை ஆனந்த நடனம் புரிந்தபடி பக்தர்களுக்கு ஆனி திருமஞ்சன தரிசனம் அளித்தார். அதைத்தொடர்ந்து நடராஜரும் சிவகாமசுந்தரியும் சித்சபைக்கு சென்றனர்.

ஆனித் திருமஞ்சன விழாவில் பங்கேற்று, நடராஜரின் ஆனந்த நடனத்தை தரிசிப்பதற்காக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர்.

நாளை (ஜூலை 3-ந் தேதி) பஞ்ச மூர்த்தி முத்துப்பல்லக்கு வீதி உலா நடக்கிறது. நாளை மறுநாள் (4-ந் தேதி) சிதம்பரம் ஞானகாச பிரகாசம் கோவில் குளத்தில் தெப்போற்சவத்துடன் விழா நிறைவடைகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com