சித்திரை அமாவாசை.. திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கோவிலில் குவிந்த பக்தர்கள்

சித்திரை அமாவாசையை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டம் மட்டுமல்லாது பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்தனர்.
சித்திரை அமாவாசை.. திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கோவிலில் குவிந்த பக்தர்கள்
Published on

திருவள்ளூரில், பிரசித்தி பெற்ற 108 திவ்ய தேசங்களில் ஒன்றான ஸ்ரீ வைத்திய வீரராகவப் பெருமாள் கோவிலில் அமாவாசை தினத்தன்று ஏராளமான பக்தர்கள் வருகை தந்து வழிபடுவது உண்டு. குறிப்பாக தை, சித்திரை, ஆடி, புரட்டாசி மாத அமாவாசை தினத்தில் பக்தர்கள் அதிகளவில் வருகை தருவார்கள்.

இந்த அமாவாசை நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால் புண்ணியம் கிடைக்கும் என்பதாலும், முன்னோர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும் என்பதால் பக்தர்கள் ஸ்ரீ வைத்திய வீரராகவர் கோவில் அருகில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கின்றனர்.

அவ்வகையில் சித்திரை அமாவாசையை முன்னிட்டு இன்று ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். திருவள்ளூர் மாவட்டம் மட்டுமல்லாது சென்னை, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் இருந்தும், ஆந்திர, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் நேற்று முதலே திருவள்ளூர் வந்தனர்.

இன்று அதிகாலை குளத்தின் அருகே மற்றும் காக்களூர் பாதாள விநாயகர் கோவில் அருகே உள்ள ஏரியில் புனித நீராடி, தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர்.

பின்னர் மூலவர் வீரராகவப் பெருமாளை வழிபட்டனர். சுமார் 3 மணி நேரம் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

சித்திரை அமாவாசையை முன்னிட்டு உற்சவர் வீரராகவப் பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் கண்ணாடி மண்டபத்தில் எழுந்தருளினார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com