

மதுரை:
மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் புரட்டாசி மாதம் 4வது சனிக்கிழமை நிகழ்வு இன்று நடந்தது. இதில் காலையிலிருந்து மாலைவரை ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்து நெய் விளக்குகள் ஏற்றிசாமி தரிசனம் செய்தனர்.
மேலும் முன்னதாக மூலவர் சுவாமி, உற்சவர் தேவியர்கள், கள்ளழகர் பெருமாள், சிறப்பு பூஜைகள், மஹா தீபாராதனைகள் மேளதாள இசையுடன், பட்டர்களின் வேத மந்திரங்களுடன் நடந்தது. தவிர நூபுர கங்கையிலும் பக்தர் புனித நீராடி அங்குள்ள ராக்காயி அம்மனை தரிசனம் செய்தனர்.
மேலும் முருகப் பெருமானின் ஆறாவது படைவீடு சோலைமுருகன் கோவிலில், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி, வித்தக விநாயகர், வேல்சன்னதியிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது. இங்கும் பக்தர்கள் விளக்கேற்றி தரிசனம் செய்தனர். தவிற அழகர் மலை அடிவாரத்தில் உள்ள பதினெட்டாம் படி கருப்பணசாமி சன்னதியிலும், சந்தனம், மாலைகள், காணிக்கையாக வழங்கி தரிசனம் செய்தனர்.
இக்கோவிலின் உப கோவிலான மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி பெருமாள் கோவிலிலும், ஏராளமான பக்தர்கள் நெய் விளக்கேற்றி சாமி தரிசனம் செய்தனர் .