அறுபடை வீடுகளுக்கு கட்டணமில்லா ஆன்மிக பயணம்.. மூத்த குடிமக்கள் விண்ணப்பிக்கலாம்

மூத்த குடிமக்களுக்கான முதற்கட்ட அறுபடை வீடு ஆன்மிக சுற்றுப்பயணம் வருகின்ற 28-ந் தேதி தொடங்க இருக்கிறது.
அறுபடை வீடுகளுக்கு கட்டணமில்லா ஆன்மிக பயணம்.. மூத்த குடிமக்கள் விண்ணப்பிக்கலாம்
Published on

சென்னை:

தமிழ் கடவுள் என்று போற்றப்படுகின்ற முருகப்பெருமான் வீற்றிருக்கும் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகியவற்றிற்கு மூத்த குடிமக்கள், ஒரேமுறையாக சென்று தரிசனம் செய்திட சிரமப்படுவதை கருத்தில் கொண்டு இலவசமாக அழைத்துச் செல்லும் புதிய முயற்சியை இந்து சமய அறநிலையத்துறை மேற்கொண்டுள்ளது.

அதாவது, இந்த 6 கோவில்களுக்கும் கட்டணமில்லாமல் 60 வயது முதல் 70 வயதிற்குட்பட்ட 200 பேர் வீதம் ஆண்டிற்கு 5 முறை அதாவது 1,000 பக்தர்களை அழைத்து சென்று தரிசனம் செய்து வைக்க உள்ளனர்.

அதன்படி, முதற்கட்ட அறுபடை வீடு ஆன்மிக சுற்றுப்பயணம் வருகின்ற 28-ந் தேதி தொடங்க இருக்கிறது. இதற்கான விண்ணப்பத்தினை இன்று முதல் இந்து சமய அறநிலையத்துறையின் இணையதளத்தில் (https://hrce.tn.gov.in/resources/docs/hrcescroll_doc/178/document_1.pdf) பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.

தகுதியுடைய 200 விண்ணப்பதாரர்கள் முதற்கட்ட பயணத்தில் அழைத்துச் செல்லப்படுவர். ஏனைய தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் அடுத்தடுத்த ஆன்மிக பயணங்களில் அழைத்து செல்ல முன்னுரிமை வழங்கப்படும்.

இத்தகவலை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com