தை அமாவாசை: ராமேசுவரம் கோவில் நடை திறப்பில் மாற்றம்

தை அமாவாசை வருகிற 29-ந்தேதி அன்று வருகிறது.
தை அமாவாசை: ராமேசுவரம் கோவில் நடை திறப்பில் மாற்றம்
Published on

ராமேசுவரம்,

ராமேசுவரம் கோவிலுக்கு ஆண்டுதோறும் ஆடி மற்றும் தை அமாவாசை நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி சாமி தரிசனம் செய்ய வருவது வழக்கம். இந்த ஆண்டு தை அமாவாசை வருகிற 29-ந்தேதி அன்று வருகிறது. இதனிடையே தை அமாவாசையை முன்னிட்டு 29-ந் தேதி ராமேசுவரம் கோவில் நடை திறப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

வருகிற 29-ந்தேதி அதிகாலை 4 மணியளவில் கோவில் நடையானது திறக்கப்பட்டு 5 மணி முதல் 5.30 மணி வரை படிகலிங்க தரிசனம் நடைபெறுகின்றது. தொடர்ந்து வழக்கமான கால பூஜை நடைபெறும். பின்னர் பகல் 11 மணிக்கு மேல் ராமபிரான் தங்க கருட வாகனத்தில் பஞ்ச மூர்த்திகளுடன் அக்னி தீர்த்த கடற்கரைக்கு தீர்த்தவாரி பூஜைக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடைபெறும்.

தொடர்ந்து இரவு 7 மணிக்கு மேல் வெள்ளி ரத புறப்பாடு நடைபெறுகின்றது. அதுபோல் வழக்கமாக பகல் 1 மணிக்கு அடைக்கப்படும் கோவில் நடையானது தை அமாவாசையை முன்னிட்டு 29-ந்தேதி அன்று அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு அன்று இரவு 9 மணிக்கு பின்னரே அடைக்கப்படும். இந்த தகவலை கோவில் இணை ஆணையர் சிவராம் குமார் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com