திருச்செந்தூர் கந்தசஷ்டி விழா: வைர வேலுடன் பக்தர்களுக்கு காட்சியளித்த சுவாமி ஜெயந்திநாதர்

சுவாமி ஜெயந்திநாதருக்கு 4 ஆண்டுகளுக்கு பின் இன்று வைரவேல் சாத்தப்பட்டுள்ளது.
திருச்செந்தூர் கந்தசஷ்டி விழா: வைர வேலுடன் பக்தர்களுக்கு காட்சியளித்த சுவாமி ஜெயந்திநாதர்
Published on

திருச்செந்தூர்,

முருப்பெருமானின் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 2-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழா தொடங்கிய முதல் நாளில் இருந்து கோவிலில் திரளான பக்தர்கள் கந்தசஷ்டி விரதம் இருந்து வருகின்றனர். உள்ளூர், வெளியூர் மட்டுமின்றி வெளிநாட்டில் இருந்தும் பக்தர்கள் வந்து தங்கி இருந்து விரதம் கடைபிடித்து வருகின்றனர்.

4-ம் திருநாளான இன்று அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. காலை 9 மணிக்கு மூலவருக்கு உச்சிகால அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. தொடர்ந்து யாக சாலையில் உள்ள சுவாமி ஜெயநாதருக்கும் அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடந்தது.

பின்னர் சுவாமி ஜெயந்திநாதர் வைர வேல் வைத்தவாறு, வள்ளி-தெய்வானை அம்பாளுடன் தங்க சப்பரத்தில் சண்முக விலாச மண்டபத்துக்கு எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த வைரவேல் சுவாமிக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் சாத்தப்பட்டது. பின்னர் இந்த ஆண்டு கந்தசஷ்டி திருவிழா 4-ம் நாளான இன்று மீண்டும் சுவாமி ஜெயந்திநாதருக்கு சாத்தப்பட்டுள்ளது.

மாலையில், திருவாவடுதுறை ஆதீனம் கந்தசஷ்டி மண்டபத்தில் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானைக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சுவாமி, அம்பாளுக்கு அலங்காரம், தீபாராதனைக்கு பின்னர், சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி-தெய்வானையுடன் தங்கரதத்தில் எழுந்தருளி கிரி வீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.

6-ம் நாளான நாளை மறுநாள்(வியாழக்கிழமை) அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விசுவரூப தீபாராதனையும், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், காலை 9 மணிக்கு உச்சிக்கால அபிஷேகம், மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது. மாலை 4.30 மணியளவில் கடற்கரையில் சுவாமி ஜெயந்திநாதர், சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் அருள்முருகன், இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் மாவட்ட நிர்வாகமும், கோவில் பணியாளர்களும் செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com