ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா ஆரம்பம்

வைகாசி திருவிழா நாட்களில் தினசரி இரவு சாமி ஊர்வலம் மற்றும் மண்டகப்படிதாரர்கள் மூலம் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா ஆரம்பம்
Published on

மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. கொடியேற்றத்துக்கு முன்பாக சிறப்பு யாகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கொடியேற்றத்திற்கான பூஜை பொருட்களை சோழவந்தானின் நான்கு ரத வீதிகளில் ஊர்வலமாக எடுத்து வந்தனர். பின்னர் கோவிலில் உள் பிரகாரத்தில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.

திருவிழா 17 நாட்கள் தொடர்ந்து நடைபெறும். தினசரி இரவு சாமி ஊர்வலம் மற்றும் மண்டகப்படிதாரர்கள் மூலம் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. அவ்வகையில் வருகின்ற 10-ம் தேதி காலை பால்குட ஊர்வலம், மாலை அக்னி சட்டியும், 11-ம் தேதி மாலை 5 மணி அளவில் மந்தை களத்தில் பூக்குழியும், 17-ம் தேதி காலை திருத்தேரோட்ட நிகழ்ச்சியும் 18-ம் தேதி இரவு சோழவந்தான் வைகை ஆற்றில் தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

கொடியேற்றத்தை தொடர்ந்து நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் காப்பு கட்ட தொடங்கினர். நேற்று இரவு 12 மணி வரை சுமார் 5000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பால்குடம், அக்னிச்சட்டி, பூக்குழி உள்ளிட்ட நேர்த்திக்கடன்களுக்காக காப்பு கட்டினர்.

திருவிழாவை முன்னிட்டு சோழவந்தான் பேரூராட்சி சார்பில் சுகாதாரம் மற்றும் குடிநீர் ஏற்பாடுகளும் சோழவந்தான் காவல்துறை சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது. திருவிழா நடைபெறும் காலங்களில் சோழவந்தானில் போக்குவரத்தை ஒருவழிப்பதையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அனைத்து பேருந்துகளும் பேருந்து நிலையம் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com