வைகாசி திருவிழா: பூப்பந்தல் வாகனத்தில் எழுந்தருளிய பகவதி அம்மன்

வைகாசி விசாகத் திருவிழாவின் இரண்டாவது நாளான இன்று பகவதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
வைகாசி திருவிழா: பூப்பந்தல் வாகனத்தில் எழுந்தருளிய பகவதி அம்மன்
Published on

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி விசாக பெருந்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழா 9-ந்தேதி வரை 10 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது.

திருவிழாவையொட்டி தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், விசேஷ பூஜை, சிறப்பு வழிபாடுகள், அலங்கார தீபாராதனை, அன்னதானம், வாகன பவனி, சப்பர ஊர்வலம், நாதஸ்வர கச்சேரி, பரதநாட்டியம், இன்னிசைக் கச்சேரி, பக்தி சொற்பொழிவு மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

முதல் நாள திருவிழாவான நேற்று மாலை நாதஸ்வர கச்சேரியும் இரவு சமய உரையும் அதைத் தொடர்ந்து பரதநாட்டியமும், பக்தி இன்னிசைகச்சேரியும் நடந்தது. அதன்பிறகு அம்மன் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பூப்பந்தல் வாகனத்தில் எழுந்தருளி, மேளதாளங்கள் முழங்க வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

கோவிலில் இருந்து புறப்பட்ட இந்த வாகன பவனி சன்னதி தெரு, தெற்கு ரத வீதி, பிள்ளையார் கோவில் தெரு, நடுத்தெரு, மேல ரதவீதி, வடக்கு ரதவீதி, கீழரத வீதி வழியாக மீண்டும் கோவிலை வந்தடைந்தது. வழிநெடுகிலும் பக்தர்கள் தேங்காய் பழம் படைத்து "திருக்கணம்"சாத்தி அம்மனை வழிபட்டனர்.

இந்த நிகழ்ச்சியில் நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளரும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளருமான ஆனந்த், திருவிழா மண்டகப்படி கட்டளைதாரர் பகவதி பெருமாள்பிள்ளை உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

2-வது நாளான இன்று அதிகாலை 5மணி மற்றும் காலை 10 மணிக்கு பகவதி அம்மனுக்கு எண்ணெய், பால்,தயிர், இளநீர், பன்னீர், நெய், தேன், மஞ்சள் பொடி, சந்தனம், களபம், குங்குமம், பஞ்சாமிர்தம் மற்றும் புனித நீரால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக பல்லக்கில் அம்மன் எழுந்தருளி வீதி உலா வந்த நிகழ்ச்சி நடந்தது. காலை 11 மணிக்கு அம்மனுக்கு தங்கக் கிரீடம் வைரக்கல் மூக்குத்தி மற்றும் தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சந்தனகாப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

அதைத் தொடர்ந்து 11.30 மணிக்கு அம்மனுக்கு அலங்கார தீபாராதனையும் பகல் 12 மணிக்கு அன்னதானமும் நடந்தது. மாலை 6 மணிக்கு சமய உரையும் இரவு 7 மணிக்கு வயலின் இன்னிசை கச்சேரியும் 8மணிக்கு பரதநாட்டியமும் நடக்கிறது. பின்னர் 9 மணிக்கு அம்மன் கிளி வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com