சிவராத்திரியில் இரவு முழுவதும் விழித்திருப்பது ஏன் தெரியுமா?

சிவராத்திரியில் விரதமிருந்து உறக்கத்தைத் தவிர்க்கும்போது புலன்கள் கட்டுப்படுவதாக கூறப்படுகிறது.
சிவராத்திரியில் இரவு முழுவதும் விழித்திருப்பது ஏன் தெரியுமா?
Published on

சிவராத்திரி அன்று கண் விழித்து விரதமிருந்து இறைவனை வணங்கும் போது முழுமையான இறைவன் அருள் கிடைக்கும், நினைத்த காரியம் கைகூடும் என்பது நம்பிக்கை. விரதம் கடைப்பிடிப்போர் முதல் நாள் ஒரு பொழுது உணவருந்தி சிவராத்திரியன்று உபவாசமாய் காலையில் குளித்து சிவ சிந்தனையுடன் கண் விழித்திருந்து நான்கு ஜாம வழிபாடு செய்ய வேண்டும். அடுத்த நாள் காலையில் தீர்த்தமாடி, சுவாமி தரிசனம் செய்து அடியார்களுடன் உணவருந்தி விரதத்தை நிறைவு செய்தல் வேண்டும்.

சிவராத்திரிக்கு மறுநாள் சிவபுராணம் படித்தோ அல்லது கேட்டோ, பகல் பொழுதைக் கழிக்க வேண்டும்.மனம் போனபடி போகும் புலன்களைக் கட்டுப்படுத்துவதே விரதம் இருப்பதன் அடிப்படை நோக்கமாகும். உணவை தவிர்க்கும் போது உணர்வுகளைக் கட்டுப்படுத்துவது என்பது எளிது என்று கருதப்படுகிறது. தினமும் நாம் அனுபவிக்கும் நித்திரை தாமச குணத்தின் வெளிப்பாடு என்றும், விழித்திருப்பதன் மூலம் அந்த குணம் கட்டுப்பாட்டுக்குள் வருகிறது என்றும் சொல்லப்படுகிறது.

இவ்வாறு உணவையும் உறக்கத்தையும் கட்டுப்படுத்துவதன் மூலம் நாம் சாதாரண விழிப்பு நிலையையும், விழிப்பற்ற உறக்க நிலையையும் கடந்து மிக உயர்ந்த உணர்வு விழிப்பு நிலைக்கு செல்கிறோம்.

சாதாரண விழிப்பு, உறக்க நிலைகள் இறைவனை உணர்வதற்குத் தடையாக இருப்பனவாகக் கருதப்படுகின்றன. தினமும் விழிப்பு நிலைக்கும் தூக்க நிலைக்கும் போய் வரும் நாம் உயர் விழிப்பு நிலை பற்றி உணர்வதே இல்லை. சிவராத்திரியில் விரதமிருந்து உறக்கத்தைத் தவிர்க்கும்போது புலன்கள் கட்டுப்படுவதாக கூறப்படுகிறது.அந்த நிலையில் நின்று இறைவனைப் போற்றி வழிபடும் போது உணர்வுகள் வெண்ணெய்போல உருகி, நாம் உயர்ந்த விழிப்பு நிலைக்குச் செல்ல வழி வகுக்கிறது.

இந்த வருடம் மகா சிவராத்திரி 26.2.2025 அன்று கொண்டாடப்படுகிறது. சிவராத்திரி வழிபாடு 26-ம் தேதி மாலையில் தொடங்கி மறுநாள் காலை வரை நடைபெறுகிறது. இதற்காக சிவாலயங்களில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மகா சிவராத்திரி விரதம் இருப்பவர்கள் சிவராத்திரி அன்று அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு வீட்டில் உள்ள சிவன் படத்திற்கு சிவபூஜை செய்து அருகில் உள்ள சிவன் கோவில்களுக்கு சென்று சிவனை தரிசனம் செய்ய வேண்டும். முடியாதவர்கள் .சிவாலயங்களுக்கு சென்று நான்கு காலங்களிலும் நடைபெறும் விசேஷ பூஜை மற்றும் அபிஷேகங்களை கண்டு களிக்கலாம்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com