2-வது டி20: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற பாகிஸ்தான்

image courtesy:twitter/@ProteasMenCSA
இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா 110 ரன்களில் சுருண்டது.
லாகூர்,
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.
இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது போட்டி லாகூரில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் சல்மான் ஆகா பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி ஆரம்பம் முதலே பாகிஸ்தானின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்டுகளை இழந்தது. 19.2 ஓவர்கள் தாக்குப்பிடித்த தென் ஆப்பிரிக்கா 110 ரன்களில் சுருண்டது. அதிகபட்சமாக பிரெவிஸ் 25 ரன்கள் அடித்தார். தென் ஆப்பிரிக்க அணியில் 6 பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர். பாகிஸ்தான் தரப்பில் பஹீம் அஷ்ரப் 4 விக்கெட்டுகளும், சல்மான் மிர்சா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதனையடுத்து 111 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணி வெறும் 13.1 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 112 ரன்கள் அடித்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக சைம் அயூப் 71 ரன்கள் அடித்தார்.
இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையை எட்டியுள்ளது.






