

இந்தூர்,
மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் நகரத்தை சேர்ந்த ஒரு கலைஞர், 7 ஆயிரத்து 700 சதுர அடியில் ரங்கோலி கோலம் வரைந்து சாதனை படைத்துள்ளார்.
ஷிகா சர்மா என்ற ரங்கோலி கலைஞர் தன்னுடைய குழுவினருடன் சேர்ந்து இதை உருவாக்கியுள்ளார். அவர்கள் மொத்தம் 20 பேர் சேர்ந்து 45 மணி நேரத்தில் இந்த ரங்கோலி கோலமிட்டுள்ளனர். டோனி, ரோகித் சர்மா மற்றும் கோலி ஆகியோரின் உருவப்படங்களை மிகவும் தத்ரூபமாக உருவாக்கி உள்ளனர்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,
இதற்கு முன் ரங்கோலி வரைந்து 4 உலக சாதனைகளை நான் நிகழ்த்தியுள்ளேன். 3 குவிண்டால் வண்ணப்பொடிகளை கொண்டு இந்த ரங்கோலி கோலத்தை உருவாக்கி உள்ளோம். நாங்கள் டோனி, ரோகித் சர்மா மற்றும் கோலி ஆகியோரின் உருவத்தை வரைந்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
ஷிகா சர்மா குழுவினர், இந்தூரில் உள்ள கால்சா கல்லூரியின் விளையாட்டு அரங்கில் இந்த ரங்கோலியை வரைந்துள்ளனர். பல்வேறு தரப்பினரும் இந்த முயற்சிக்கு தங்களது பாராட்டுக்களை தெரிவித்தனர். முன்னதாக அவர் உலகின் மிகப்பெரிய 3டி வடிவ ராமர் கோவில் ரங்கோலியை வரைந்து உலக சாதனை நிகழ்த்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கிரிக்கெட் ரசிகர்களை இருக்கையின் நுனியில் உட்காரச் செய்யும் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான அனல் பறக்கும் டி20 உலகக்கோப்பை போட்டி இன்று மாலை துபாயில் நடைபெறுகிறது. இரண்டு ஆண்டுகள் கழித்து இன்று, இவ்விரு அணிகளும் நேருக்கு நேர் பலப்பரிட்சை நடத்த உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இது போன்ற செயல்கள் மூலம் இந்திய ரசிகர்கள் தங்கள் வாழ்த்துக்களை இந்திய கிரிக்கெட் அணிக்கு தெரிவித்து வருகின்றனர்.