உக்ரைன் மீது ரஷியா படையெடுப்பை தொடங்கிவிட்டது - இங்கிலாந்து மந்திரி


உக்ரைன் மீது ரஷியா படையெடுப்பை தொடங்கிவிட்டது - இங்கிலாந்து மந்திரி
x
தினத்தந்தி 22 Feb 2022 10:08 AM GMT (Updated: 22 Feb 2022 10:08 AM GMT)

உக்ரைன் மீது ரஷியா படையெடுப்பை தொடங்கிவிட்டது என்று இங்கிலாந்து மந்திரி தெரிவித்துள்ளார்.

லண்டன்,

முன்னாள் சோவியத் ஒன்றிய நாடான உக்ரைன் ‘நேட்டோ’ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷியா, உக்ரைன் நாட்டின் எல்லையில் சுமார் 1½ லட்சம் படை வீரர்களை குவித்துள்ளது. இதனால் ரஷியா எந்த நேரத்திலும் உக்ரைனுக்குள் ஊடுருவி அந்த நாட்டை ஆக்கிரமிக்கலாம் என அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் தொடர்ந்து எச்சரித்து வந்தன.

இதற்கிடையில், கிழக்கு உக்ரைனில் ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள டுனெட்ஸ் மற்றும் லுகன்ஸ் பகுதிகளை தனி நகரங்களாக ரஷியா நேற்று அங்கீகரித்தது. 

இதனை தொடர்ந்து டுனெட்ஸ் மற்றும் லுகன்ஸ் நகரங்களுக்கு ரஷியா தனது படைகளை அனுப்பி வைத்துள்ளது. உக்ரைன் எல்லைக்குள் ரஷியா தனது படைகளை அனுப்பி வைத்துள்ளதால் டுனெட்ஸ் மற்றும் லுகன்ஸ் நகரங்கள் ரஷியாவுடன் இணைந்துள்ளது. இந்த நிகழ்வுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. 

உக்ரைனின் பகுதிகளாக உள்ள டுனெட்ஸ் மற்றும் லுகன்ஸ் நகரங்களில் படைகளை களமிறக்க ரஷிய அதிபர் புதின் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து டுனெட்ஸ், லுகன்ஸ் பகுதிகளை ரஷியா தனது படைகளை நிலைநிறுத்தியுள்ளது.

இந்நிலையில், உக்ரைன் மீதான ரஷியாவின் படையெடுப்பு தொடங்கிவிட்டதாக இங்கிலாந்து தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இங்கிலாந்து சுகாதாரத்துறை மந்திரி சஜித் ஜாவித் கூறுகையில், உக்ரைன் மீது ரஷியாவின் படையெடுப்பு தொடங்கிவிட்டது. உக்ரைனின் இறையாண்மை மற்றும் அதன் பிராந்திய ஒருமைப்பாட்டின் மீது தாக்குதல் நடத்த ரஷிய அதிபர் புதின் முடிவு செய்துவிட்டார்’ என்றார். 

Next Story