

சென்னை,
பாலிவுட்டின் புகழ்பெற்ற பின்னணிப் பாடகர் அரிஜித் சிங், இசைத் துறையில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்த திடீர் அறிவிப்பு அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தனது திரை இசைப் பயணத்தை இத்துடன் நிறுத்திக்கொள்ள முடிவெடுத்துள்ளதாக தனது இன்ஸ்டாகிராமில் திடீரென அறிவித்துள்ளார் அரிஜித் சிங். இது குறித்து அவர் வெளியிட்ட பதிவில், "பின்னணிப் பாடகராக இனி எந்த புதிய பணிகளையும் ஏற்கப் போவதில்லை. அதேவேளையில், ஒரு இசையமைப்பாளராக எனது பயணம் தொடரும். ரசிகர்களின் ஆதரவுக்கு நன்றி" என்று தெரிவித்திருக்கிறார்.
அரிஜித் சிங்கின் இந்தத் திடீர் முடிவு பாலிவுட் இசையமைப்பாளர்கள் மற்றும் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்கள் முழுக்க பலரும் தங்கள் வருத்தத்தை பதிவு செய்து வருகின்றனர்.
கடந்த10 ஆண்டுகளுக்கு மேலாக இந்தி சினிமாவின் முக்கிய பாடகராக திகழ்ந்தவர் அரிஜித் சிங். ‘ஆஷிகி 2’ படத்தின் ‘தும் ஹி ஹோ’ பாடல் தொடங்கி, சமீபத்திய பல ஹிட் பாடல்கள் வரை இவரது குரலுக்கு மயங்காத ரசிகர்கள் இல்லை. தமிழில் சூர்யா நடித்த "24" திரைப்படத்தில் இடம்பெற்ற "நான் உன் அழகினிலே" (Naan Un) பாடலை இவர் பாடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது