மோசடி வழக்கு: பிரபல பாடகிக்கு கைது வாரண்ட்

மோசடி வழக்கில் பிரபல பாடகிக்கு லக்னோ கோர்ட்டு கைது வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டு உள்ளது.
மோசடி வழக்கு: பிரபல பாடகிக்கு கைது வாரண்ட்
Published on

அரியானாவை சேர்ந்த பிரபல பாடகி சப்னா சவுத்ரி. இவர் நடன கலைஞராகவும் இருக்கிறார். சப்னா சவுத்ரிக்கு வட மாநிலங்களில் நிறைய ரசிகர்கள் உள்ளனர். சப்னாவின் நடனம் மற்றும் பாடல் நிகழ்ச்சிகளுக்கு கட்டுக்கடங்காத கூட்டம் கூடுவது உண்டு. பாடல் ஆல்பங்களும் வெளியிட்டு உள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றும் பிரபலமானார். இந்த நிலையில் சப்னா மீது லக்னோ கோர்ட்டில் மோசடி வழக்கு தொடரப்பட்டது. 2018-ல் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க சப்னா முன்கூட்டியே பணம் வாங்கிவிட்டு அந்த நிகழ்ச்சிக்கு வராமல் புறக்கணித்து விட்டதாக மனுவில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த வழக்கை கோர்ட்டு விசாரித்து சப்னா சவுத்ரிக்கு கைது வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டு உள்ளது. இதையடுத்து சப்னாவை கைது செய்ய போலீசார் தேடி வருகிறார்கள். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே சப்னா சவுத்ரி மீது ஒரு வணிக நிறுவனம் ஒப்பந்தத்தை மீறி செயல்பட்டு மோசடி செய்து விட்டதாக டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தது. அதன்பேரில் சப்னா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

X

Daily Thanthi
www.dailythanthi.com