அவதூறு வழக்கில் கங்கனா ரணாவத் ஆஜராக கோர்ட்டு சம்மன்

அவதூறு வழக்கில், நீதிமன்றத்தில் ஆஜராக நடிகை கங்கனா ரனாவத்துக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
அவதூறு வழக்கில் கங்கனா ரணாவத் ஆஜராக கோர்ட்டு சம்மன்
Published on

நடிகை கங்கனா ரணாவத் சமூக வலைத்தளத்தில் பதிவிடும் கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன. இதன் மூலம் எதிர்ப்பையும் சம்பாதித்து வருகிறார்.

இந்த நிலையில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப்பில் விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் பங்கேற்ற மகிந்தர் கவுர் என்ற வயதான பெண்ணின் புகைப்படம் வெளியானது.

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக டெல்லியில் நடந்த போராட்டத்திலும் இதே பெண் கலந்து கொண்டதாக கூறப்பட்டது. அந்த மூதாட்டியை கங்கனா ரணாவத் கூலிக்கு போராடுகிறவர் என்றும், போராட்டத்தில் பங்கேற்க கூலியாக ரூ.100 வாங்கி இருக்கிறார் என்றும் டுவிட்டரில் தெரிவித்து இருந்தார்.

இதற்கு பதில் அளித்த மகிந்தர் கவுர் ரூ.100 கூலி வாங்கவில்லை என்றும், டெல்லியில் நடந்த போராட்டத்தில் பங்கேற்கவில்லை என்றும் மறுத்தார். இதனால் டுவிட்டர் பதிவை கங்கனா நீக்கினார்.

இதையடுத்து பஞ்சாப் மாநிலம் பதிண்டா மாவட்ட நீதிமன்றத்தில் கங்கனாவுக்கு எதிராக மகிந்தர் கவுர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் கங்கனா ரணாவத் ஏப்ரல் மாதம் 19-ந்தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று கோர்ட்டு சம்மன் அனுப்பி உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com