கர்நாடக சட்டசபை தேர்தல்: மாலை 5 மணியுடன் ஓய்ந்தது பிரசாரம், சனிக்கிழமை வாக்குப்பதிவு

கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலை 5 மணியுடன் ஓய்ந்தது. நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. #KarnatakaElections
கர்நாடக சட்டசபை தேர்தல்: மாலை 5 மணியுடன் ஓய்ந்தது பிரசாரம், சனிக்கிழமை வாக்குப்பதிவு
Published on

பெங்களூரு,

கர்நாடகத்தில் முதல்மந்திரி சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. காங்கிரஸ் ஆட்சியின் பதவி காலம் வருகிற 28ந் தேதி முடிவடைகிறது. இதையடுத்து கர்நாடக சட்டசபைக்கு வருகிற 12ந் தேதி தேர்தல் நடக்கிறது. தேர்தல் களத்தில் 2,655 வேட்பாளர்கள் உள்ளனர். இதில் ஆளும் காங்கிரஸ் கட்சி சார்பில் 222 தொகுதியிலும், பா.ஜனதா சார்பில் 224 தொகுதியிலும், ஜனதா தளம்(எஸ்)பகுஜன் சமாஜ் சார்பில் 219 தொகுதியிலும் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.

கொளுத்தும் கோடை வெயிலையும் பொருட்படுத்தாமல் தலைவர்கள் தீவிரமான வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இன்று பிரசாரத்துக்கு கடைசி நாள் என்பதால், தேசிய கட்சிகளின் தலைவர்கள் கர்நாடகத்தில் இன்று முற்றுகையிட்டு பிரசாரம் மேற்கொண்டனர். மேலும் தேர்தலையொட்டி வெளிமாநிலம் மற்றும் வெளிமாவட்ட அரசியல் கட்சியினரும் தங்கியிருந்து, தங்களது கட்சிகளுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தனர். . திரைப்பட நடிகர்நடிகைகளும் பல்வேறு கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான பிரசாரம் இன்று (வியாழக்கிழமை) மாலை 5 மணியுடன் ஓய்ந்தது. இருப்பினும், வேட்பாளர்கள் ஒலிபெருக்கி, பிரசார வாகனங்கள் பயன்படுத்தாமல் வீடு, வீடாக சென்று வாக்கு சேகரிக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

பகிரங்க பிரசாரம் முடிவடைவதால் கர்நாடக சட்டசபை தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு 48 மணி நேரத்துக்கு முன்பாக நட்சத்திர பேச்சாளர்கள், பிரசாரத்தில் ஈடுபடும் வெளியூரை சேர்ந்தவர்கள் இன்று மாலை 6 மணியுடன் தாங்கள் தங்கியுள்ள தொகுதியில் இருந்து வெளியேற வேண்டும் என்று கர்நாடக தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com