பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

பிப்ரவரி 5, 9, 10 மற்றும் 11 ஆகிய நாட்களில் 2026-27 மத்திய பட்ஜெட்டுக்கான பொது விவாதம் நடைபெறும்.
பட்ஜெட் கூட்டத்தொடர்:  ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு
Published on

புதுடெல்லி,

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. ஏப்ரல் மாதம் 2-ந்தேதி வரை நடைபெறும் இந்த கூட்டத்தொடரை 2 கட்டங்களாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கூட்டத்தொடரின் தொடக்கத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார். அப்போது, விமான விபத்தில் நேற்று உயிரிழந்த, மராட்டிய மாநில துணை முதல்-மந்திரி அஜித் பவாரின் மறைவுக்கு அவர் இரங்கல் தெரிவித்து கொண்டார்.

இந்நிலையில், மக்களவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது என தகவல் வெளியாகி உள்ளது. இந்த விவாதம் பிப்ரவரி 2, 3 மற்றும் 4 ஆகிய நாட்களில் நடைபெறும்.

இதுதொடர்பாக மக்களவையின் அலுவல் ஆலோசனை குழு இன்று கூடி முடிவு செய்துள்ளது. இதனை தொடர்ந்து, பிப்ரவரி 5, 9, 10 மற்றும் 11 ஆகிய நாட்களில் 2026-27 மத்திய பட்ஜெட்டுக்கான பொது விவாதம் நடைபெறும். இதற்கு, மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 11-ந்தேதி பதிலளித்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சூழலில், நேற்று முன்தினம் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தின்போது, மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம், தேர்தல் தொடர்பாக நடந்து வரும் எஸ்.ஐ.ஆர். பணிகள் மற்றும் பல்கலைக்கழக மானிய குழு சர்ச்சை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் பற்றி விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.

இதுதொடர்பாக மக்களவையில் இன்றும் அமளி ஏற்பட்டது. இதற்கு மத்தியில் நாடாளுமன்றத்தில், 2025-26 நிதியாண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்துள்ளார்.

எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால், அவை இன்று மதியம் ஒத்தி வைக்கப்பட்டது. மக்களவை கூட்டத்தொடருக்கான அடுத்த சந்திப்பு, பிப்ரவரி 1-ந்தேதி காலை 11 மணியளவில் நடைபெறும் என தகவல் தெரிவிக்கின்றது. அப்போது, மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com