

கொலை, கற்பழிப்பு
மேற்கு வங்காளத்தில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் 8 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடந்தது. மே 2-ந் தேதி ஓட்டு எண்ணிக்கை நடந்தது. அதில், திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெறும் நிலை தோன்றியவுடன், ஆங்காங்கே வன்முறை சம்பவங்கள் நடந்தன. தங்கள் ஆதரவாளர்கள் குறிவைத்து தாக்கப்பட்டதாக பா.ஜனதா குற்றம் சாட்டியது.கற்பழிப்பு, கொலை போன்ற கொடிய குற்றங்களும் நடந்தன. இவை தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடக்கோரி, கொல்கத்தா ஐகோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.இம்மனுக்களை விசாரித்த தலைமை நீதிபதி (பொறுப்பு) ராஜேஷ் பிண்டால் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு நேற்று தீர்ப்பு அளித்தது. மேற்கு வங்காள தேர்தலுக்கு பின்பு நடந்த கொலை, கற்பழிப்பு போன்ற கொடிய குற்றங்கள் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது.
சிறப்பு புலனாய்வு குழு
மேலும், தேர்தலுக்கு பிந்தைய இதர குற்றங்கள் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைத்து உத்தரவிட்டது. இந்த இரண்டு விசாரணைகளும், கொல்கத்தா ஐகோர்ட்டு கண்காணிப்பில் நடைபெறும் என்று நீதிபதிகள் கூறினர்.சிறப்பு புலனாய்வு குழுவில், போலீஸ் டி.ஜி.பி. (தொலைத்தொடர்பு) சுமன்பாலா சாகூ, கொல்கத்தா போலீஸ் கமிஷனர் சவுமன் மித்ரா, ரன்வீர் குமார் உள்ளிட்டோர் இடம்பெறுவார்கள் என்றும் தெரிவித்தனர்.
தங்கள் விசாரணை நிலவரம் குறித்து 6 வாரங்களில் சி.பி.ஐ. அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.