

பாலசோர்,
ஒடிசாவில் பாலசோர் ரெயில் நிலையத்தில் சிமெண்ட் கலவை இயந்திரத்தினை லெவல் கிராசிங் வழியே ஊழியர்கள் 10 பேர் இழுத்து கொண்டு சென்றுள்ளனர். இந்த நிலையில் அந்த வழியே சென்னை-ஹவுரா கோரமண்டல் எக்ஸ்பிரெஸ் ரெயில் வந்துள்ளது.
இதனால் லெவல் கிராசிங் வழி மூடப்பட்டது. ரெயில் செல்வதற்கு வழிவகை செய்யப்பட்டது. இதனை கண்ட அந்த ஊழியர்கள் இயந்திரத்தினை தண்டவாளத்தில் விட்டு விட்டு தப்பியோடினர்.
இதனை அடுத்து அங்கு வந்த ரெயிலானது இயந்திரத்தின் மீது மோதியுள்ளது. இதில் அந்த இயந்திரம் பலத்த சேதமடைந்தது. இந்த சம்பவத்தில் வேறு யாரும் காயமடையவில்லை.
இந்த தகவல் அறிந்து அங்கு வந்த அதிகாரிகள் ரெயிலை பாலசோர் ரெயில் நிலையத்தில் வைத்து சோதனை செய்தனர். ரெயில் என்ஜினையும் பரிசோதித்தனர். அதன்பின் ரெயில் புறப்பட்டு சென்றது. சம்பவ இடத்திற்கும் சென்று அதிகாரிகள் ஆய்வு செய்து அவற்றை சரி செய்தனர்.