கேரளாவில் வரும் 16ந்தேதி வரை கனமழை, பலத்த காற்று வீசும்: முதல் மந்திரி எச்சரிக்கை

கேரளாவில் நாளை மறுநாள் வரை கனமழை, பலத்த காற்று வீசும் என முதல் மந்திரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கேரளாவில் வரும் 16ந்தேதி வரை கனமழை, பலத்த காற்று வீசும்: முதல் மந்திரி எச்சரிக்கை
Published on

திருவனந்தபுரம்,

கேரளாவில் கொரோனா பாதிப்புகள் ஒருபுறம் அதிகரித்து வரும் சூழலில் வருகிற 23ந்தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டு உள்ளன. இதனால் மக்கள் அவதியடைந்த சூழலில், சூறாவளி புயலால் கனமழை பெய்து பல்வேறு இடங்களில் வெள்ளநீர் சூழ்ந்து காணப்படுகிறது.

இந்நிலையில், கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் செய்தியாளர்கள் சந்திப்பில் இன்று கூறும்பொழுது, கேரளாவில் சூறாவளி புயலால் வருகிற 16ந்தேதி வரை கனமழை பெய்யும். பலத்த காற்று வீசும். கடல் சீற்றமுடன் காணப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்திய வானிலை ஆய்வு மையம் பல்வேறு மாவட்டங்களுக்கு சிவப்பு மற்றும் ஆரஞ்சு வர்ண எச்சரிக்கை விடுத்துள்ளது. அதனால், இன்றிரவு மிக நெருக்கடியான சூழல் காணப்படும். தொடர்ந்து கனமழை ஏற்பட்டால், வெள்ளப்பெருக்கு மற்றும் தாழ்வான பகுதிகளில் நீர்த்தேங்கி நிற்பது ஆகியவை காணப்படும் என தெரிவித்து உள்ளார்.

இதேபோன்று, கடலோர பகுதிகளில் கடல் அரிப்பு ஏற்பட கூடிய சூழலும் உள்ளது. அதனால், அதிகாரிகள் கூறும் விசயங்களை மக்கள் கவனிக்க வேண்டும். அவர்கள் எச்சரிக்கை விடுக்கிறார்கள் என்றால் அதனை கேட்டு நிவாரண முகாம்களுக்கு செல்ல வேண்டும் என்றும் தெரிவித்து உள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com