

புதுடெல்லி,
கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக மிக முக்கிய பாதுகாப்பு கவசமாக தடுப்பூசி கருதப்படுகிறது. உலக அளவில் வளர்ந்த நாடுகள் மற்றும் வளரும் நாடுகளில் கொரோனா தடுப்பூசி போடும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இந்தியாவில் கொரோனா 2-வது அலை தணியத்தொடங்கியுள்ள நிலையில், தடுப்பூசி போடும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது. 3-வது அலை பாதிப்பை தடுப்பூசி போடுவதன் மூலம் கணிசமாக கட்டுப்படுத்த முடியும் என்று பரவலாக மருத்துவ நிபுணர்கள் கூறுவதால், தடுப்பூசி போடும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
18-வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி இலவசமாக போடப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். மாநில அரசுகளுக்கு மத்திய அரசே நேரடியாக விநியோகிக்கும் எனவும் பிரதமர் மோடி அண்மையில் அறிவித்தார். இந்த நடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
இந்த நிலையில், இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் இன்று ஒரே நாளில் 69.25 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்று 30.30 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்ட நிலையில், இன்று இரு மடங்காக அதிகரித்துள்ளது. இதற்கு முன்பாக கடந்த ஏப்ரல் 2 ஆம் தேதி 42 லட்சத்து 65 ஆயிரத்து 157- பேருக்கு தடுப்பூசி போடப்பட்டதே அதிகபட்சமாக இருந்தது.