

பெங்களூரு: பெங்களூரு எசருகட்டா சாலை மல்லசந்திரா பகுதியில் வசித்து வந்தவர் நாராயணப்பா. இவரது மனைவி மஞ்சுளா. இவர்கள் 2 பேரும் சேர்ந்து நிதி நிறுவனம் நடத்தி வந்தனர். அந்த நிதி நிறுவனத்தில் ஏராளமானோர் மாத சீட்டு கட்டி வந்தனர். அதாவது 400-க்கும் மேற்பட்டோர் அந்த நிறுவனத்தில் பணம் கட்டி வந்ததாக தெரிகிறது. தங்களிடம் பணம் கட்டியவர்களிடம் இருந்து நாராயணப்பா-மஞ்சுளா ஆகியோர் கோடிக்கணக்கில் பணம் வசூலித்துவிட்டு தப்பி சென்று விட்டனர்.
பணத்தை கட்டி ஏமாந்தவர்கள் தினமும் நாராயணப்பா வீட்டின் முன்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள். மேலும் பணம் கட்டி ஏமாற்றம் அடைந்த சிலர் தம்பதி மீது பகலகுண்டே போலீஸ் நிலையத்திலும் புகார் அளித்து உள்ளனர். அந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தம்பதியை தேடிவருகின்றனர்.