பிரதமர் வருகையின்போது பாதுகாப்பு குறைபாடு எதுவும் இல்லை - பஞ்சாப் முதல்-மந்திரி சரண்ஜித் சிங்

பிரதமர் வருகையின்போது பாதுகாப்பு குறைபாடு எதுவும் இல்லை என பஞ்சாப் முதல்-மந்திரி சரண்ஜித் சிங் தெரிவித்துள்ளார்.
பிரதமர் வருகையின்போது பாதுகாப்பு குறைபாடு எதுவும் இல்லை - பஞ்சாப் முதல்-மந்திரி சரண்ஜித் சிங்
Published on

சண்டிகர்,

பஞ்சாப் மாநிலம் பெராஸ்பூரில் நடைபெற இருந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்க இருந்தார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று 42,750 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்க இருந்தார்.

இந்த நிகழ்ச்சிக்காக இன்று காலை பஞ்சாப் சென்ற பிரதமர் மோடி, நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு ஹெலிகாப்டர் வாயிலாக செல்ல இருந்தார். ஆனால், மோசமான வானிலை கரணமாக மோடியின் ஹெலிகாப்டர் பயணம் ரத்து செய்யப்பட்டு சாலை மார்க்கமாக செல்ல திட்டமிடப்பட்டது.

ஆனால்,போராட்டம் காரணமாக சாலை மறிக்கப்பட்டிருந்ததால் பதிண்டா என்ற இடத்தில் மேம்பாலத்தில் பிரதமர் மோடியின் வாகன கன்வாய் 15- 20 நிமிடங்கள் அப்படியே நின்றது. பிரதமரின் பாதுகாப்பு ஏற்பாட்டில் ஏற்பட்ட மிகப்பெரிய குளறுபடி நடைபெற்றதையடுத்து மோடி பங்கேற்க இருந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.

உடனடியாக பதிண்டா விமான நிலையத்திற்கே பிரதமர் மோடி திரும்பிச்சென்றார். பாதுகாப்பு குறைபாடுகளால் பிரதமர் மோடியின் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாபில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. 2 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று பிரதமர் மோடி பஞ்சாப் பயணம் மேற்கொண்டு இருந்த நிலையில், பாதுகாப்பு ஏற்பாட்டில் குளறுபடி ஏற்பட்டதால் பிரதமர் மோடியின் பயணம் ரத்தாகியுள்ளது அரசியல் ரீதியாகவும் விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது.

இந்த நிலையில் பிரதமர் வருகையின்போது பாதுகாப்பு குறைபாடு எதுவும் இல்லை என பஞ்சாப் முதல்-மந்திரி சரண்ஜித் சிங் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது;-

பிரதமருக்கு நாங்கள் மதிப்பு அளிக்கிறோம். அதே சமயம் இச்சம்பவத்துக்கு வருந்துகிறோம். பிரதமர் வருகையின்போது பாதுகாப்பு குறைபாடு எதுவும் இல்லை. மோசமான வானிலை, போராட்டம் காரணமாக பயணத்தை ரத்து செய்ய ஏற்கனவே கோரியிருந்தோம்.

இன்று பிரதமர் வருகையின்போது முறையாக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. எனது செயலருக்கு கொரோனா பாதிப்பு இருந்ததால் நான் பிரதமரை வரவேற்க செல்ல இயலவில்லை. பாஜவினர் தான் இந்த விவகாரத்தை அரசியலாக்குகின்றனர்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com