

புதுடெல்லி,
தமிழக முதல்-அமைச்சராகவும், அ.தி.மு.க. பொதுச் செயலாளராகவும் இருந்த ஜெயலலிதா மரணம் அடைந்ததால் அந்த கட்சி இரண்டாக உடைந்தது. அதிமுக அம்மா, அதிமுக புரட்சி தலைவி அம்மா என இரு அணிகளாக அதிமுக பிளவு பட்டுள்ளது.
அ.தி.மு.க. கட்சி தங்கள் பக்கம்தான் உள்ளது என்பதை தேர்தல் ஆணையத்தில் நிரூபிக்க இரு அணிகளும் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. இதற்கிடையில் பிளவுபட்ட அணிகளை இணைப்பதற்காக 2 தரப்பிலும் குழுக்கள் அமைக்கப்பட்டது. ஆனாலும் 2 தரப்பினரும் முரண்பாடான கருத்துகளை கூறி வருவதால் அ.தி.மு.க.வில் பிளவுபட்ட அணிகள் இணைவதில் தொடர்ந்து சிக்கல் ஏற்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இரட்டை இலை சின்னம் விவகாரம் தொடரபக தேர்தல் ஆணையத்தில் ஓ பன்னீர் செல்வம் அணியினர் கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்துள்ளனர். தொண்டர்கள், நிர்வாகிகள் கையெழுத்திட்ட 13,000 பிரமாணப் பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஓபிஎஸ் அணி தரப்பில் ஏற்கனவே 20,000 பிரமாணப் பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.