

புதுடெல்லி,
டெல்லியில் ஓடும் மெட்ரோ ரயில்களில் கட்டணம் ரூ.10 வரை உயர்த்தப்படுவதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த விலை உயர்வு அடுத்த மாதம் முதல் அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மே மாதம்தான் மெட்ரோ ரயிலின் டிக்கெட் விலை உயர்த்தப்பட்ட நிலையில், மீண்டும் ரயில் டிக்கெட் விலை உயர்த்தப்பட்டதற்கு டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள கெஜ்ரிவால், மெட்ரோ ரயில் டிக்கெட் விலை உயர்வு மக்கள் நலனுக்கு எதிரனது. மெட்ரோ ரயில் கட்டணம் உயர்வதை தடுக்கும் வழியை ஒருவாரத்திற்குள் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போக்குவரத்து துறை மந்திரி கைலாஷ் கலோட்டிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
டெல்லி மெட்ரோ ரயிலின் விலை நிர்ணைய குழு அளித்த பரிந்துரையின் படி கடந்த மே மாதம் முதல்கட்டமாக மெட்ரோ ரயில் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், அக்டோபர் மாதம் முதல் மேலும் விலையை அதிகரிக்க மெட்ரோ ரயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் இந்த முடிவுக்கு பரவலாக எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.