தெலுங்கானா அரசை கலைக்க அந்த மாநில அமைச்சரவை பரிந்துரை

தெலுங்கானா அரசை கலைக்க அந்த மாநில அமைச்சரவை பரிந்துரை செய்து உள்ளது. முதல்வர் கவர்னரை சந்தித்து பரிந்துரையை அளிக்கிறார்.
தெலுங்கானா அரசை கலைக்க அந்த மாநில அமைச்சரவை பரிந்துரை
Published on

ஐதராபாத்,

தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி ஆட்சியைக் கைப்பற்ற அதன் தலைவரான சந்திரசேகர ராவ் முதல்மந்திரி ஆனார். தெலுங்கானா சட்டசபையின் ஆயுள் காலம் முடிவதற்கு இன்னும் 8 மாத காலம் உள்ளது.

எனினும், சட்டசபையை முன்கூட்டியே கலைத்துவிட்டு தேர்தலை சந்திக்க தயாராக இருப்பதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த கட்சி மாநாட்டில் சந்திரசேகர ராவ் அறிவித்தார். அன்று தனது மந்திரி சபையை கூட்டியும் அவர் விவாதித்தார். சட்டசபை தேர்தலை முன்கூட்டியே சந்திப்பதற்கு வசதியாக பல்வேறு நலத்திட்ட அறிவிப்புகளையும் அண்மைக்காலமாக அவருடைய அரசு வெளியிட்டு வருகிறது.

இந்த நிலையில் தெலுங்கானா மந்திரிசபை மீண்டும் இன்று கூடியது. கடந்த 5 நாட்களில் மந்திரி சபை கூடுவது 2வது முறையாகும்.

இந்த கூட்டத்தில் தெலுங்கானா அரசை கலைக்க பரிந்துரைக்கபட்டது. இந்த பரிந்துரையை முதல்வர் சந்திர சேகரராவ் கவர்னரிடம் அளிக்கிறார்.

தெலுங்கானா சட்டசபை கலைக்கப்பட்டால் விரைவில் நடைபெற இருக்கும் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், மிசோரம் ஆகிய மாநில சட்டசபை தேர்தல்களுடன் தெலுங்கானாவிலும் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com