

பெங்களூரு,
கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு நுரையீரலில் பாதிப்பு ஏற்படுகிறது. அந்த தொற்று பாதிப்பின் அளவை தெரிந்துகொள்ள சி.டி.ஸ்கேன் செய்யப்பட்டு அறிந்து கொள்ளப்படுகிறது. இதனால் சி.டி.ஸ்கேன் எடுப்பது அதிகரித்துள்ளது. இந்த நிலையில் கர்நாடக அரசு, சி.டி.ஸ்கேன் கட்டணத்தை நிர்ணயித்துள்ளது.
அதன்படி நுரையீரல் சி.டி.ஸ்கேன் எடுக்க கட்டணமாக ரூ.1,500 ஆகவும், எக்ஸ்ரேவுக்கு ரூ.250 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக வந்த புகாரை அடுத்து இந்த கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கூறியுள்ளார்.
அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை விட கூடுதலாக வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகள் மற்றும் ஆய்வகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. அரசு ஆஸ்பத்திரிகளில் சி.டி.ஸ்கேன், எக்ஸ்ரே இலவசமாக மேற்கொள்ளப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.