

பெங்களூரு:
முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கடந்த சில நாட்களுக்கு முன்பு, 11 ஆயிரம் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் பணிநிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று அறிவித்தார். மேலும் 43 ஆயிரம் தூய்மை பணியாளர்களின் பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். இந்த நிலையில் தூய்மை பணியாளர்கள் தினத்தையொட்டி பசவராஜ் பொம்மை நேற்று ரேஸ்கோர்ஸ் இல்லத்திற்கு தூய்மை பணியாளர்களை வரவழைத்து அவர்களுடன் சேர்ந்து காலை சிற்றுண்டியை சாப்பிட்டார். அப்போது அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். அதன் பிறகு பசவராஜ் பொம்மை நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
கர்நாடகத்தில் மொத்தம் 43 ஆயிரம் தூய்மை பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள். முதல் கட்டமாக 11 ஆயிரத்து 137 பேரின் பணி நிரந்தரம் செய்யப்படுகிறது. மீதம் உள்ளவர்களின் பணியும் படிப்படியாக நிரந்தரம் செய்யப்பட்டு அவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கப்படும். அரசின் இந்த நடவடிக்கையால் தூய்மை பணியாளர்களிடையே புதிய நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இத்தனை ஆண்டு உழைப்புக்கு தற்போது உரிய நியாயம் கிடைத்துள்ளதாக அவர்கள் உணர தொடங்கியுள்ளனர். மனிதாபிமான அடிப்படையில் அவர்களின் நலனுக்காக திட்டங்களை செயல்படுத்துகிறோம்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினர்.