

பெங்களூரு,
கர்நாடகாவில் எரிசக்தி துறை மந்திரியாக இருப்பவர் கே.ஜே. ஜார்ஜ். இந்நிலையில், சட்டசபை கூட்டத்தொடரில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. மற்றும் முன்னாள் மந்திரியான சுனில் குமார் இன்று பேசும்போது, முதல்-மந்திரி சித்தராமையாவின் மகன் யதீந்திர சித்தராமையா அரசின் பல்வேறு துறைகளில் தலையிடுகிறார்.
அதில், எரிசக்தி துறையும் அடங்கும். இதனால், மனவேதனையில் ஜார்ஜ் இருக்கிறார் என தகவல்கள் எனக்கு கிடைத்தன. அவர் பதவி விலகுவார் என தகவல்கள் வெளிவருகின்றன. இதுபற்றிய கேள்விக்கு பதிலளித்து நிலைப்பாட்டை தெளிவுப்படுத்தும்படி அவர் கேட்டு கொண்டார்.
இதற்கு சபையில் பதிலளித்த எரிசக்தி துறை மந்திரி ஜார்ஜ், நான் முதல்-மந்திரி சித்தராமையாவுடனேயே இருக்கிறேன். நாங்கள் அவருக்கு ஆதரவு தருகிறோம். அதனால், பதவி விலகல் என்ற கேள்விக்கே இடமில்லை. அது உண்மைக்கு அப்பாற்பட்டது. அதுபோன்று எதுவும் இல்லை என பதிலாக கூறினார்.
அது வெறும் வதந்தி என கூறிய அவர், நான் அரசின் பிரதிநிதியாக உள்ளேன். தொடர்ந்து, கர்நாடக எரிசக்தி துறை மந்திரியாக என் பணிகளை மேற்கொள்வேன். அந்த வதந்திகளை புறந்தள்ளுங்கள் என்றும் அவையில் ஜார்ஜ் கூறினார்.