

கொல்கத்தா,
அஸ்ஸாம் மாநிலத்தில் சில்சார் விமான நிலையத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு தடுத்து நிறுத்தப்பட்டதை கண்டித்து மேற்கு வங்க மாநிலம் முழுவதும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளை கருப்பு தினமாக அனுசரிக்க உள்ளதாக திரிணமூல் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
இதுகுறித்து திரிணமூல் காங்கிரஸ் கட்சி பொது செயலாளர் பார்த்தா சாட்டர்ஜி கூறியதாவது
அஸ்ஸாம் மாநிலத்தில் கடந்த திங்கள்கிழமை தேசிய குடிமக்கள் பதிவேட்டின் இறுதி வரைவு பட்டியல் வெளியிடப்பட்டது. இதையடுத்து 6 எம்.பி.-க்கள் உள்பட 8 பேர் நாடாளுமன்றக் குழு அந்த மாநிலத்தின் கச்சார் மாவட்டத்தில் கள நிலவரத்தை பார்வையிடச் சென்றது. ஆனால் நாடாளுமன்றக் குழு உறுப்பினர்கள் சில்சார் விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர்.
அரசு பிரதிநிதிகளை அஸ்ஸாம் போலீஸார் இவ்வாறு கையாண்ட விதம் கண்டிக்கத்தக்கது. எம்.பி.யாக, அவர்களுக்கு ஓர் இடத்துக்கு செல்ல அனைத்து உரிமையும் உள்ளது. இருந்தும் அனைத்து விதிகளும் மீறப்பட்டு எங்கள் கட்சி எம்.பி.க்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர்களை நடத்தியது அவமானத்துக்குரியது. இதைக் கண்டித்து சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு தினங்களும் மாநிலம் முழுவதும் கருப்பு தினம் கடைப்பிடிக்க உள்ளோம் இவ்வாறு அவர் கூறினார்.