கடலூர் மத்திய சிறையில் உள்ள சவுக்கு சங்கரை பார்வையாளர்கள் சந்திக்க ஒரு மாதத்திற்கு தடை

சவுக்கு சங்கரை சிறையில் பார்வையாளர்கள் சந்திக்க ஒரு மாதத்திற்கு கடலூர் மத்திய சிறை நிர்வாகம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது
கடலூர் மத்திய சிறையில் உள்ள சவுக்கு சங்கரை பார்வையாளர்கள் சந்திக்க ஒரு மாதத்திற்கு தடை
Published on

மதுரை,

சமூக வலைதளத்தில் ஐகோர்ட்டு தீர்ப்பு குறித்தும், நீதிபதிகள் குறித்தும் அவதூறாக பதிவிட்டது தொடர்பாக சவுக்கு சங்கர் மீது அவமதிப்பு வழக்கை மதுரை ஐகோர்ட்டு ஏற்கனவே பதிவு செய்திருந்தது. இந்த நடவடிக்கைக்கு பின்னரும், யூடியூப் சேனலில் இந்த விவகாரம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக, கிரிமினல் அவமதிப்பு வழக்கும் மதுரை ஐகோர்ட்டு பதிவு செய்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், புகழேந்தி ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அதில் நீதித்துறையை அவதூறாக விமர்சித்த வழக்கில் அவமதிப்பு நடவடிக்கையாக சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை தண்டனை வழங்கி மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி சவுக்கு சங்கர் மதுரை மத்திய சிறையில் அடைக்கபட்டார்.

பின்னர் நிர்வாக காரணங்கள் மற்றும் அச்சுறுத்தலால் சவுக்கு சங்கர், மதுரை சிறையில் இருந்து கடலூர் சிறைக்கு மாற்றப்பட்டார். கடந்த 16-ந்தேதி முதல் சவுக்கு சங்கர் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் சவுக்கு சங்கரை சிறையில் பார்வையாளர்கள் சந்திக்க இன்று முதல் ஒரு மாதத்திற்கு கடலூர் மத்திய சிறை நிர்வாகம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

சிறையில் சவுக்கு சங்கரை செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் பார்வையாளர்கள் சந்திக்க சிறைத்துறை அனுமதி அளித்து இருந்தது. சிறையில் அடைக்கப்பட்டது முதல், 4 நாட்களில் 25 பார்வையாளர்கள் சவுக்கு சங்கரை சந்தித்ததால், அசவுகரியமான சூழல் ஏற்பட்டதால் தற்போது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com