

மதுரை,
மதுரை புதூர் பகுதியில் அமைந்துள்ள அம்மா உணவகத்தில் மாநகராட்சி அனுமதித்துள்ள 1 ரூபாய்க்கு விற்கப்படும் இட்லி மற்றும் 5 ரூபாய்க்கு விற்கப்படும் பொங்கலுக்கு பதிலாக பூரி, வடை, உப்புமா, சப்பாத்தி, ஆம்லேட் என தனியார் உணவகத்தில் கிடைப்பது போன்று பல்வேறு வகையான உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதேபோல் மதிய வேளைகளிலும் சாதத்துடன் ரசம், மோர், ஆம்லேட் உள்ளிட்டவை விற்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
ஏழை எளியோரின் பசி போக்க செயல்பட்ட அம்மா உணவகத்தை சிலர் தங்களுக்கு லாபம் ஈட்டும் உணவகமாக மாற்றியுள்ளதாக பொதுமக்கள் புகார் அளித்தனர். இதையடுத்து இந்த புகார் குறித்து உரிய விசாரணைகள் நடத்த வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன.
இந்த நிலையில், மதுரையில் அம்மா உணவகத்தில் அனுமதிக்கப்படாத உணவுகளை விற்பனை செய்த விவகாரம் தொடர்பாக மகளிர் குழுவின் ஒப்பந்தத்தை ரத்து செய்து மதுரை மாநகராட்சி உதவி ஆணையர் உத்தரவிட்டுள்ளார். மேலும் விரைவில் புதிய மகளிர் குழுவிற்கு ஒப்பந்தம் வழங்கப்படும் என மதுரை மாநகராட்சி உதவி ஆணையர் தெரிவித்துள்ளார்.