

புதுடெல்லி,
இந்திய தேர்தல் ஆணையத்தில் இருந்து இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக பெங்களூரைச் சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர் என்பவர் மூலம் 2017-ம் ஆண்டு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டிடிவி தினகரன், இடைத்தரகர் சந்திரசேகர் உள்ளிட்டோர் மீது டெல்லி குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கில் கடந்த 12ம் தேதி காலை 10.50 மணிக்கு டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் டிடிவி தினகரன் ஆஜரானார். அப்போது டிடிவி தினகரனிடம் அமலாக்கத்துறையினர் 11 மணி நேரங்களுக்கும் மேலாக விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின் போது லஞ்சம் கொடுக்கபட்டதற்கு உரிய ஆவணங்கள் இல்லாத போதிலும் சுகேஷ் சந்திரசேகர் கொடுக்கக்கூடிய வாக்குமூலங்களின் அடிப்படையில் கேள்விகள் கேட்கப்பட்டது.
இந்த நிலையில், இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் தர முயன்றதாக பதிவான வழக்கு தொடர்பாக டெல்லி, அமலாக்கத் துறை அலுவலகத்தில் டிடிவி தினகரன் இன்று (22.04.2022) வெள்ளிக்கிழமை மீண்டும் ஆஜராகி விளக்கம் அளிக்கிறார்.