

சென்னை,
சென்னையில் கடந்த சில நாட்களாக கோடையை முன்னிட்டு கடும் வெயில் சுட்டெரித்து வந்தது. தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், பகலில் மக்கள் வெளியே செல்லாமல் கூடியவரை தவிர்த்து வந்தனர். பல நகரங்களில் வெப்பநிலை 100 டிகிரிக்கு மேல் சென்றது.
சென்னையில் வெப்ப சலனம் ஏற்பட்டு இன்று காலை திடீரென இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. உடன் பலத்த காற்றும் வீசி வருகிறது. சென்னை புரசைவாக்கம், எழும்பூர், வேப்பேரி, ஆலந்தூர், கிண்டி, பெரியமேடு, அசோக்நகர், கோடம்பாக்கம், விருகம்பாக்கம் மற்றும் அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
இதேபோன்று சூளைமேடு, ஒ.எம்.ஆர், நுங்கம்பாக்கம், பாலவாக்கம், சேத்துப்பட்டு, கிழக்கு கடற்கரை சாலை ஆகிய பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. தாம்பரம், அனகாபுத்தூர் பகுதிகளில் காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இதனால் அந்த பகுதிகளில் மின்சார வினியோகம் துண்டிக்கப்பட்டு உள்ளது.
திருவள்ளூரில் புழல் செங்குன்றம், பொன்னேரி மற்றும் பட்டாபிராம் போன்ற பகுதிகளிலும் இன்று காலை முதல் மழை பெய்து வருகிறது.