

சென்னை,
குடிநீர், சுகாதாரம், நோய் தடுப்பு, தாய் சேய் நலம் மற்றும் சுற்றுச்சூழலில் சிறந்த சேவை செய்ததாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை பாராட்டி பால் ஹாரீஸ் பெல்லோ என்ற கவுரவப் பட்டத்தை அமெரிக்க நிறுவனம் வழங்கி பாராட்டி உள்ளது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
அமெரிக்கா நாட்டின் சிகாகோ நகரத்தை தலைமையிடமாகக் கொண்டு தி ரோட்டரி பவுண்டேஷன் ஆப் ரோட்டரி இண்டர்நேஷனல் என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது.
இந்த அமைப்பு, குடிநீர், சுகாதாரம், நோய் தடுப்பு, தாய் சேய் நலம், சுற்றுச்சூழல், உலக சமாதானம் போன்ற துறைகளில் சிறப்பான முறையில் சேவையாற்றுபவர்களை பால் ஹாரீஸ் பெல்லோ என்று அழைத்து கவுரவப்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் இதுபோன்ற சேவையை பாராட்டி அவரை பால் ஹாரீஸ் பெல்லோ என்று கவுரப்படுத்தி உள்ளது. இந்தத் தகவலை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.